Wednesday 22 May 2019

வெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை

பிரித்தானியப் பேரரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் ஒரு சிறந்த அணிகலன் (India, the crown jewel of the British Empire) என இந்தியா பெயர் பெற்றது. இவ்வாறு குறிப்பிட்டவர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli, 1874-81) என்ற இங்கிலாந்தின் பிரதமர். உலக வரலாற்றில், வளங்கள் பல கொண்ட, சிறப்பு மிக்க இந்தியா இங்கிலாந்துக்குக் கிட்டாமலே கைநழுவிப் போயும் இருக்கலாம். இந்தியாவை நவீன போர்க்கருவிகள் உதவிகொண்டு பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று நாம் யாவரும் பிரஞ்சு மொழி பேசும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டவர் தனது ஐம்பதாவது வயதில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தைப் பிரெஞ்சு வணிக அமைப்பின் தாக்குதல்களிலிருந்து காக்கும் பொறுப்பை ஏற்ற மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். இவரே இந்தியாவின் இராணுவத்தை முதலில் கட்டமைத்து உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர். இந்திய ராணுவத்தின் தந்தை என்று ஆங்கிலேயர் இவரைக் குறிப்பிட்டார்கள் (The First English Commander-in-Chief, India – Major-General Stringer Lawrence).
இவர் உருவாக்கி வளர்த்தெடுத்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப்படையே பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவமாகவும், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் இராணுவமாகவும் ஆனது. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றிக் கொண்டிருந்த பிரஞ்சு ஆளுநர் டூப்ளே (Dupleix) வின் கனவைக் கலைத்து, பிரான்ஸ் நாட்டிலேயே டூப்ளே மதிப்பிழந்து போகும் அளவிற்குத் தக்காணத்தில் அதிரடியாகப் போர்களை இவர் மட்டும் நடத்தியிராவிட்டால் இங்கிலாந்து இந்தியாவில் கால் ஊன்றி இருக்கமுடியாது. நாம் படித்த வரலாற்று நூல்களில் இவர் முக்கியத்துவம் சிறப்பித்துக் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல, இங்கிலாந்திலும் இவர் சாதனையை யாரும் சென்ற நூற்றாண்டிலேயே நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறுதான் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வரலாற்றை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நூலாக எழுதி வெளியிட்ட ஜான் பிட்டுல்ஃப் என்பவரும் கருதுகிறார் என்பதை அவர் நூலைப் படிக்கையில் அறிய முடிகிறது. வரலாற்றின் திருப்புமுனையை உருவாக்கிய ஒருவர் ஏனோ யாராலும் அறியப்படாமலே இருந்துவரும் நிலை தொடர்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment