Monday 20 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13


இவ்வாறு கதைகூறிய குரங்கு, “சரி, நீ உன் இடத்துக்குப் போ” என்று முதலையை அனுப்பியது. அது தன் இடத்திற்குச் சென்று பார்த்தபோது வேறொரு முதலை அங்கு இருந்தது. அதைக்கண்டு மீண்டும் “நம் நண்பனாகிய குரங்கிடமே உபாயம் கேட்கலாம்” என்று திரும்பிவந்தது. “நண்பனே நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டது. முதலையைக் கடிந்து கொண்ட குரங்கு, “உனக்கு புத்தி சொல்வதே வீண். மூடனுக்கு உபதேசித்தால் வீடு உடையவனையும் வீடு இழக்கச் செய்வான்” என்றது.
முதலை: அது எப்படி?

Siragu pancha thandhir kadaigal 13-1

குரங்கு: இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்யலானது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழையில் ஒரு குரங்கு பற்கள் கிட்டி, குளிரால் மிகவும் நடுங்கிக் கொண்டிருந்தது. குருவிகள் அதைக் கண்டு இரக்கம் கொண்டன.
குருவி: உனக்குக் கைகால்கள் இருந்தும் குளிர்காற்று முதலிய துக்கத்தை நீ அனுபவிக்கக் காரணம் என்ன? நீ ஏன் வீடுகட்டிக் கொள்ளவில்லை?
துஷ்டக் குரங்கு: ஊசிமூஞ்சி மூடா! வல்லவர்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு வந்துவிட்டாயா நீ? எனக்கு வீடு கட்டுகிற சக்தி இல்லை; ஆனால் அதைப் பிரித்தெறிகின்ற சாமர்த்தியம் உண்டு.
என்று கூறி, தூக்கணாங்குருவிகளின் கூட்டைப் பிய்த்தெறிந்தது. ஆகவே உன்னைப் போன்றவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது” என்றது குரங்கு.
முதலை: நண்பனே, நான் குற்றவாளி என்பதும் மூடன் என்பதும் மெய்யே, ஆனால் பழைய சிநேகிதன் என்ற முறையில் உன்னை உதவி கேட்கிறேன்.
குரங்கு: நீ உன் இடத்திற்கே திரும்பப் போ. உன் பகைவனோடு போர் செய். இறந்தால் சொர்க்கம் அடைவாய். வென்றால் உன் வீடு உனக்குத் திரும்பக் கிடைக்கும். முன்பு ஒரு புத்திசாலி, உத்தமனுக்குக் கும்பிடும், சூரனுக்கு பேதமும், காரியக்காரனுக்கு தானமும், ஈடானவனுக்கு தண்டமும் செய்து தன் காரியத்தில் வெற்றி அடைந்தது. அதுபோல நடந்துகொள்ள வேண்டும்.

முதலை: அது எப்படி, சொல்வாயாக.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment