Thursday 18 October 2018

பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல்

 Siragu Andy_Warhol_1975

மனிதர்களையும், நிகழ்வுகளையும், இயற்கையையும் காண்பதைக் கண்டவாரோ; அல்லது மக்களறிந்த தொன்மக் கற்பனைக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தங்களது கற்பனையில் உருவாக்கி இருபரிமாண ஓவியங்களாகவும் முப்பரிமாண சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் முறை மனித வரலாற்றில் கலை என விவரிக்கப்பட்டது. கலையின் அடிப்படை என்பது ஒலியற்ற எழுத்துவடிவற்ற முறையில் மொழி எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து ஒரு செய்தியை வாழும்காலத்தின் மக்களுக்கும் எதிர்காலத்தின் மக்களுக்கும் சொல்லிச் செல்வது. குகை மனிதர்கள் சுவரில் தீட்டிய வெள்ளை சிவப்புவண்ணக் கீறல்களோ அல்லது கோயில்களில் காணும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் அடிப்படை நோக்கம் காட்சித் தொடர்பு (Visual communication). கலைஞர் ஒருவரின் தனித்தன்மை அவரது படைப்பில் மிளிர்ந்து அவரது கருத்து மக்களைக் கவர்ந்தால் அவர் புகழ் பெற்ற கலைஞர் என்ற பெயர் எடுக்கிறார். எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோரும் எழுதினாலும் ஒருசிலரே அழகு நயத்தின் அடிப்படையில் கலைஞர் என்றும் பாவலர் என்றும் இலக்கிய உலகில் புகழ் பெறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
காலந்தோறும் ஊடகங்கள் மாறி வந்துள்ளன. சிற்பங்களும் ஓவியங்களும் கால எல்லை, மொழி எல்லை கடந்து அவை சொல்லும் செய்தி என்னவென்று உலகின் பல மூலைகளில் உள்ள மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தது; அதாவது படத்துடன் ஒரு சுருக்கமான பொருள் விளக்கக் கையேடு கொடுக்கத் தேவையற்ற நிலையில், இயல்பை விவரிக்கும் படைப்புகள் (representational visual communication) அவை. அதுவரை கலையின் கருத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் 19 நூற்றாண்டில் வேறு கோணத்தில் திரும்பியது. ஒரு கலைஞர் தனது கருத்தை எவ்வாறு தனது பார்வையில் விவரிக்கிறார் என்ற கோணத்தில் கலை திரும்பிய பொழுது; அந்தக் கருத்தாக்கத்தை கலைஞர் தனது படைப்பில் வெளிப்படுத்தும் உணர்வுக்கு (abstract expressionism) முக்கியத்துவம் ஏற்பட்டு, கலை மரபு என்ற எல்லை கைவிடப்பட்டு நவீனக்கலை (Modern art) என்பதன் காலம் துவங்கியது. ஐரோப்பா நவீனக்கலையின் தாயகம், 19 நூற்றாண்டின் மத்தியில் இருந்து சற்றொப்ப 1970 வரை, ஒரு நூற்றாண்டின் கால அளவிற்கு, பல கலைஞர்களாலும் பல ஊடகங்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டது. ஒரு படைப்பென்பது பார்வையாளரின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற நிலையை கலைப்படைப்புகள் அடைந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment