Thursday, 26 March 2020

அறிவியலே துணை (கவிதை)



siragu corona1

புயலுக்குப் பின் அமைதி என்பர்
இங்கோ ஒரு பெரும் புயல்
மௌனமாகச் சுழன்றடிக்கிறது
வலியும் வேதனையும்
நாளை வரலாறு பதியும்
அதைப் படிக்க
நாம் இருப்போமா நாளை  ?

தேவையான பொருட்களனைத்தும்
தேவைக்கு மீறி அள்ளப்படுகின்றன
ஒரு சிறு குடும்பத்திற்கு எட்டு
லிட்டர் எண்ணெய்;இருபது கிலோ அரிசி
நவுட்டப்படுகிறது ;

ஒரு நுண் கிருமி நுரையீரலோடு
சண்டையிட்டு மரணம் தர -இங்கோ
வீதிகளில் மக்கள் துவக்கிகளோடு
மலம் துடைக்கும் காகிதத்திற்குச்

சண்டையிடுகின்றனர் ;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 25 March 2020

அகிம்சை


siragu agimsai3
காந்தியடிகளின் தலையாய கொள்கைகளில் ஒன்று அகிம்சையாகும். அகிம்சை என்பதற்குக் காந்தியடிகள் உலகளாவிய அன்பு என்று பொருள் கொள்ளுகிறார் காந்தியடிகள்.
ஹிம்சை என்பது துன்புறுத்துதல் என்று பொருள்படும். அஹிம்சை என்றால் துன்புறுத்தாது இருத்தல் என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். என்றாலும் அகிம்சை என்பதை எதிர்மறை நிலையில் பொருள் உடையது என்று கொள்ளவேண்டாம் என்பது காந்தியடிகளின் கருத்தாகும். அகிம்சை என்பது தீங்கு செய்வருக்கும் கூட நன்மை செய்வது ஆகும்.
அகிம்சை என்பது தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்வது என்றால் தீங்கு செய்பவன் தீங்கு செய்து கொண்டே இருக்கலாமா என்று ஒரு கேள்வி எழும். அதற்கும் பதில் தருகிறார் காந்தியடிகள்.

தீங்கு செய்பவனைத் தொடர்ந்து அந்தத் தீங்கினைச் செய்து செய்யச் சொல்வதோ, அல்லது அதைப் பொறுத்துக் கொள்வதோ மட்டும் அகிம்சை அல்ல. அதற்கு மாறாக அன்பு என்கிற அகிம்சையின் செய்வினை வடிவம் உன்னைத் தவறு செய்கிறவர்களிடம் இருந்து விலகச் செய்யும். அதனால் அவனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்போ காயமோ ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதுவே அகிம்சை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 24 March 2020

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2


siragu anbalagan1
தகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான விளைநிலத்தில் அனைவரிடம் இருந்தும் விதைநெல் பெற்று, விதைத்து, பயிர் விளைவித்த பின்னர், விளைச்சலைத் தக்க முறையில் பங்கிடாது, அவரவர் திறமைக்கும் வலுவுக்கும் ஏற்ப அறுவடை செய்து கட்டிக் கொண்டு போங்கள் என்று கூறுவோமானால், அறம் எதுவெனத் தெரிந்தவர் அதை ஏற்றுக்கொள்ள வழியில்லை என்கிறார் (பக்கம் – 64). ஆனால் கல்வித்துறைக்காகச் செலவிடும்வரிப் பணத்திற்கு அதுதான் அப்பொழுது விளைவாக இருந்திருக்கிறது. இந்த சுரண்டல் முறையை அநீதி என்று உணர்ந்தவர் வெகு சிலரே. அரசு குடியானவனின் தெரு கடைத்தேங்காயை எடுத்துச் சென்று அக்கிரகார தெரு பிள்ளையார் கோவிலில் உடைத்துக் கொண்டிருப்பது போல நிர்வாகம் செய்துள்ளனர் என்கிறார் அன்பழகன்.

உண்மையில் பார்ப்பன வகுப்புரிமைக்கான வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகிறது. இத்தரவுகளைக் கொடுத்த அன்பழகன் சதவிகித எண்களையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூலைப் படிப்பவர் கணக்குப் போட வேண்டிய தேவையின்றி ஒரு பார்வையிலேயே வகுப்புரிமை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். தரவுகள் குறித்து அன்பழகன் தனது நூலில் ஒரு கேள்வியை எழுப்பாமல் விட்டாலும்.. தரவுகளைப் பார்வையிட்ட பிறகு நமக்கு எழவேண்டிய கேள்வி… தகுதியும் திறமையும் உள்ளவர் என்று தொழிற்கல்வியை 1940களில் ஆக்கிரமித்த இந்தப் பிரிவினரிலிருந்து அப்துல்கலாம் போல எத்தனை விஞ்ஞானிகளை நாம் இவர்களிலிருந்து அடையாளம் காட்ட முடியும்? தரவுகள் காட்டும் காலகட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவராகவே கலாம் இருந்திருப்பார். இவர்கள் அவருக்கும் மூத்த தலைமுறையினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 23 March 2020

கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள்


siragu kannadasan1
திரையிசைப் பாடல்கள் மக்கள் இலக்கியங்களாகும். எளிய மக்களின் அயர்வைப் போக்கி ஆனந்தம் தரும் இன்பப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் ஆகும். தற்காலத்தில், திரையிசைப் பாடல்கள் இல்லாத பொழுதுகள் இல்லை என்ற அளவிற்கு மக்கள் வாழ்வில் தகவல் தொடர்பு சாதனங்களுடன் திரையிசைப் பாடல்கள் கலந்து நிறைந்து நிற்கின்றன. இத்திரையிசைப் பாடல்களில் தனக்கெனத் தனித்த இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல் திறத்தை “காமம் ஞானம் என்பன அவர் கவிதை நாணயத்தின் இருபக்கங்களாக ஒளிர்ந்தன. அரசயில் அலைகளில் இருந்து மீண்டு அருளியலை நோக்கி நடந்த அவரின் பாடல்களில் ஆன்மிக உணர்வு மிளிர்ந்தது” (சிற்பி, சேதுபதி, தமிழ் இலக்கியவரலாறு, ப.395) என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் ஆன்மிகம், தத்துவம், ஞானம் கலக்காத பகுதிகளே இல்லை என்னும் அளவிற்கு இறைதேடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள் இடம் பெறும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.
இறைவனின் இருப்பிடம்

உழைப்பு இருக்கும் இடம்,  இறைவன் இருக்கும் இடம் என்கிறார் கண்ணதாசன். உழைப்பாளிகளின் உள்ளத்தில் வியர்வையில் இறைவன் நிற்பதாக அவர் உரைக்கிறார். அவ்வாறு உழைப்பவரை அணைப்பவரிடத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பது அவரின் தத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு


siragu pakthi ilakkiyam1
பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக  உயிர்க்கான நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக் கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச் சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.

கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர் பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன் மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல் ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப் பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும். எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 20 March 2020

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு


siragu anbalagan1
“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, மக்கள் மன்றம் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல். அண்மையில் காலமான, இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக தி.மு.க. உருவான நாள் முதல் அதன் உறுப்பினராகவும், 1977 முதல் 2020இல் இறக்கும் வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொது செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் நிதி, கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும், சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அரசியல் பங்களிப்பைச் செய்தவர்.
siragu anbalagan2
siragu anbalagan3

இந்த நூலை எழுதிய காலத்தில் க.அன்பழகன் ஒரு ஆறேழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவராகவும், திராவிட கொள்கைகளில் ஊறிப்போன 30 வயதுக்கும் குறைவான இளைஞராகவும் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. புள்ளிவிவரங்கள், தரவுகள் நிரம்பப் பெற்ற நூலாக இருப்பினும் நூலின் நடை எளிமையாகவும் உள்ளது. வகுப்புரிமை கொள்கைக்காகப் போராடிய தமிழகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே இந்நூலை வகைப்படுத்த முடியும். தமிழக ஆசிரியப்பணியில் இருப்போர் வரலாற்று அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய நூல் இது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்


siragu pakthi ilakkiyam1
பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் இருக்கிறதா என்பதைத் தேடினால் கண்டறிந்து பெறமுடிகின்றது. தென்னகக் கோயில்கள் போலவே வடநாட்டுக் கோயில்களையும் பக்தி இலக்கிய பெருமக்கள் பாடியுள்ளனர். சைவப் பெருமக்கள் வடநாட்டின் தலைப்பகுதியான கைலாயம் என்பதை எட்டவும் தொழவும் முயற்சி செய்ததை திருநாவுக்கரசர், காரைக்காலம்மையார் வழி பெறமுடிகிறது. வைணவ சமய வளர்ச்சி வடநாட்டில் இருந்த தன்மையை ஆண்டாளின் பனுவல்கள் வழி பெறமுடிகின்றது. ஆண்டாள் தன் பாடல்களில் வடநாட்டு வைணவத் திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். அவர் பெண் என்பதால் தானிருந்த திருவில்லிப்புத்தூர், மற்றும் திருவரங்கம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது. ஆனால் வட நாட்டு வைணவத் தலங்களைப் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆண்டாளிடம் இருந்துள்ளது. மேலும் வடநாட்டில் வைணவத் தலங்கள் சிறப்புற்று விளங்கியதால் அவை பற்றிய குறிப்புகளைச் செவிவழிச்செய்திகளாகக் கேட்டு ஆண்டாள் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டாம் திருமொழி கண்ணன் இருக்குமிடம் கொண்டு செல்வீர் என்ற தலைப்பில் அமைகின்றது. இத்திருமொழியில் ஆண்டாள் வட நாட்டு வைணவத் தலங்களைக் குறிப்பாக கண்ணன் சார்புடைய தலங்களைக் குறித்துப் பாடியுள்ளார். கண்ணன் வாழ்ந்த வடநாட்டு ஊர்களுக்கு என்னைக் கொண்டு சேருங்கள் என்பது அப்பாடலின் பொதுப்பொருள். ஆண்டாள் தானாகப்போக இயலாத நிலையில் கண்ணன் மீதான காதல் அதிகரிக்கும் சூழலில் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்ணன் இருப்பிடங்களுக்கு அழைத்துச்செல்லக் கோருவதுபோல இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.