Sunday 31 January 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்


devaneyan3
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய பெற்றோருடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் கோபி பாளையம் என்கிற கிராமம். அங்கு எட்டாம் வகுப்பு வரையிலும் அரசு உதவி பெறுகிற கிறித்துவப் பள்ளியிலும், பின் அரசுப் பள்ளியிலும் படித்தேன். பத்தாம் வகுப்பு திண்டுக்கலில் அரசு உதவி பெறுகிற பள்ளியில் படித்தேன். அதன்பிறகு இளங்கலை இயற்பியல் கோபி கலைக்கல்லூரியிலும், முதுகலை இயற்பியல் லயோலா கல்லூரியிலும் படித்திருக்கிறேன். அப்பா ஒரு தனித்தமிழ் ஆர்வலர், பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மாணவர்.
அடிப்டையில் எங்களது கிராமப்புரத்தில் நிறைய விடயங்களைக் கொண்டுவருவதற்கு என்னுடைய அப்பா ஒரு காரணம். பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்து பள்ளிக்கூடத்தையே ஒரு சமூகக்கூடமாக மாற்றியவர். அதனால் என்னுடைய வீட்டில் அனைவருக்குமே சமூகப்பணி என்பது சாதாரண விடயம்தான். என்னுடைய வீடு இயல்பாகவே தமிழறிஞர்கள், சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தொண்டர்கள், அம்பேத்கர் தொண்டர்கள் என்று இந்த மாதிரி சமூகம் சார்ந்து இயங்கும். அதனால் எனக்கு இயல்பாகவே சிறிய வயதிலிருந்தே அதில் ஆர்வம் உண்டு.
அதன்பிறகு என்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலகட்டத்தில், ஈழத்தமிழர் போரில் என்னுடைய அப்பா தீவிரமாக ஈடுபட்டார். அவருடன் இணைந்து வேலைசெய்ததால், பெரியாரிய அமைப்பு கூட்டங்கள், தமிழ் அமைப்பு கூட்டங்கள் என்று இந்த மாதிரி கூட்டங்களுக்கெல்லாம் சென்று சென்று இயல்பாகவே வீடே அந்த அடிப்படையில் இருந்தது. அதன்பிறகு கல்லூரியில் படிக்கும் பொழுது பெரியாரிய சிந்தனையாளர் திராவிட கழகம் மரியாதைக்குரிய ராமகிருஷ்ணனோடு இனைந்து பணியாற்றுவதற்கும், மரியாதைக்குரிய ஐயா பெருஞ்சித்திரனாருடைய மகன் பொழிலனோடு இணைந்து பணியாற்றுவதற்கான வேலைகளை நிறைய செய்ததற்குப்பின், இயல்பாகவே பெரியாரிய, தமிழ்தேசிய, அம்பேத்கரிய பார்வையும் வந்தது.

அதன்பிறகு கல்லூரி படிப்பு MSc-யை லயோலா கல்லூரியில் முடித்ததற்குப் பிறகு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தது மட்டுமல்லாமல், தமிழ்சான்றோர் அமைப்பில் ஒருங்கிணைக்கிற பொறுப்பை ஏற்படுத்திதமிழ்நாடு முழுவதும் 100 தமிழர்கள் சாகும் வரை பட்டினிப் போராட்டம், தமிழ்வழி கல்விக்கான போராட்டத்திற்கான நெறிப்படுத்துகிற வேலைகளையும், தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தில் தமிழிசை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துகிற வேலைகளையும், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ், தமிழர் அமைப்புகளோடு இணைந்து ஒருங்கிணைக்கிற பணியிலும் இருந்தேன். குறிப்பாக சுப.வீரபாண்டியன், தோழர் தியாகு, மணியரசன், பெரியார்தாசன் இவர்களோடு இயங்குவதற்கான ஒரு பெரிய வாய்ப்பையும், அவர்களோடு நெருங்கிப் பழகி அம்பேத்கார், பெரியாரிய சிந்தனைகளை கிராமப்புற கூட்டங்களில் எற்படுத்துவதற்கும், வீதி நாடகங்கள் போன்ற அமைப்புகள் இயக்கப் பாடல்களோடு பாடுவதற்கான பிரச்சார பயணங்களிலும், தனித்தமிழ் இதழ்கள், பெரியாரிய, மாக்சீய அறிஞர்களின் இதழ்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பணிகளையும் பல்வேறு கட்டங்களில் வேலைசெய்து வந்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 28 January 2016

சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு-8


sangappaadalgal2
சங்கப் புலவர்களிலே தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் கபிலர். அருளும் அன்பும் உளத்தூய்மையும் வாய்மையும் பாட்டியற்றும் வன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர். அறவோராய், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கியவர். சங்கப் புலவர்களால் போற்றிப் புகழப்பட்டவர். பாரியின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர். புறநானூற்றின் எட்டாவது பாடல் இவருடையது. சேரலாதனைப் போற்றிப் புகழும் பாடல். பாடாண்திணையைச் சார்ந்தது. பாடப்படும் தலைவனின் புகழும் ஆற்றலும் ஈகையும் அருளும் புகழ்ந்து உரைப்பதே பாடாண்திணை. அந்த வகையில் அமைந்த பாடலிது.
சேரலாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டு யாரோ ஒரு புலவர் பாடியிருக்கின்றார் போலும்! அதைக் கேட்ட கபிலர், கதிரவனிடமே கேட்கின்றார், “கதிரவனே! நீ எப்படி என் மன்னனோடு ஒப்பாவாய்” என்று!. அதற்கான காரணங்களையும் அடுக்கடுக்காக அடுக்குகின்றார் கபிலர்.

சேரலாதனைப் பிற அரசர்கள் வணங்கிச் செல்வர். ஆனால், சூரியனோ பிற கோள்களின் வழியே செல்கின்றான். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 27 January 2016

தேனி பெண்ணின் விண்வெளி கனவு..


vinveli kanavu1
உதய கீர்த்திகா… ஒரு சாதாரண நடுத்தர குடும்ப தேனி பெண்ணுக்கு உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிக்க இடம் கிடைத்திருக்கிறது. அவரது விண்வெளி கனவுகளும், திறமைகளும், ஆர்வங்களும் வியப்பூட்டக் கூடியவை. அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப் பற்றி?
உதய கீர்த்திகா: சொந்த ஊர் தேனி. அப்பா ‘அல்லிநகரம்’ தாமோதரன் சிறுகதை எழுத்தாளர், ஓவியர். அம்மா அமுதா வழக்கறிஞர் ஒருவரிடம் தட்டச்சராக வேலை பார்க்கிறார். வீட்டுக்கு நான் ஒரே மகள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண். +2 வில் 1030 மதிப்பெண்கள். அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு. தமிழ்வழிக் கல்விதான் பயின்றேன். தற்போது உலகின் சிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான மேற்குஉக்ரைன் நாட்டில் உள்ள Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு தொடர்பான Aerospace engineering என்ற படிப்பில் சேர்ந்திருக்கிறேன்.
விண்வெளி துறையில் ஆர்வம் எப்படி வந்தது?
உதய கீர்த்திகா: நிலவைக் காட்டி அப்பா கதை சொன்ன காலத்திலேயே, ‘என்னை நிலாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கப்பா’-ன்னு அடம்பிடிச்சிருக்கேன். 9-ம்வகுப்புப் படித்தபோது, எந்தத் துறையைத் தேர்வு செய்தால் என் சுபாவத்துக்கு நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, விண்வெளி ஆராய்ச்சிதான் என்ற முடிவுக்கு வந்தேன். மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பாக எங்கே, எந்தப்போட்டி நடந்தாலும் உடனே என் பெயரைக் கொடுத்து விடுவேன்.

நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளிவீரர் தொடர்பான நூல்களைத் தேடித்தேடிப் படிப்பேன். அவை தொடர்பான தகவல்கள், துணுக்குகளை குறிப்பு எடுத்துவைத்துக் கொள்வேன். அதுதான் பல விண்வெளி ஆய்வுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்க உதவியது. +2 க்குப்பிறகு விண்வெளித்துறை சார்ந்த படிப்புதான் படிக்கவேண்டும் என்ற உறுதியான கனவோடு இருந்தேன். இப்போது அந்தக்கனவு நனவாகியிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 January 2016

பாயும் காளை


paayum kaalai1
“ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்ற சிற்பி உருவாக்கிய “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் நியூயார்க் நகரின் “பாயும் காளை” சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு வெண்கல சிற்பம் (bronze sculpture). நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற சிற்பம் “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) எனவும், “பவுலிங் கிரீன் புல்” (Bowling Green Bull) எனவும் அழைக்கப்படுவதுண்டு. அமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப் பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை உருவாக்க இதன் சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா $360,000 டாலர்களைச் செலவிட்டார்.
paayum kaalai2
பாயும் காளை நியூயார்க் நகரின் சின்னமாகவும், வால் ஸ்ட்ரீட்டின் சின்னமாகவும் கருதப்படுவதால் வால் ஸ்ட்ரீட் ஐகான் (Wall Street icon), ஃபைனான்சியல் டிஸ்ட்டிரிக்ட் ஐகான், நியூயார்க் ஐகான் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள் கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயத் தயாராக உள்ள காளையின் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆளுமைத் தன்மையையும், செழிப்பையும், நிதிநிலை முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வால் ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. உருவில் மிகப் பெரியதாக அமைந்ததால், பல பாகங்களாக செய்யப்பட்டு, அவையாவும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டச் சிற்ப வடிவம் இது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 25 January 2016

சித்த மருத்துவம் ஒன்றும் முற்றிய நோய்களுக்கான மருத்துவமல்ல


mutriya noikkaana maruthhuvam4

எந்த நோயானாலும் சரி, அதற்கு ஆரம்ப நிலையிலேயே சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக சரிசெய்துவிட முடியும். அதுமட்டுமல்ல, அந்நோய் மீண்டும் வராமலே தடுத்துவிடவும் முடியும்.
ஆனால், என் அனுபவத்தில் நோயாளிகளிடம் நான் பார்க்கும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், முதலில் ஏதேனும் ஒரு மருத்துவ முறையைப் பார்க்க வேண்டியது, (ஒருவேளை அந்த மருத்துவ முறையில் அந்த நோயை குணமாக்கக்கூடிய மருந்துகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். மாறாக வெறும் நிவாரணம் மட்டும் இருக்கலாம்) இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்து அந்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை எடுப்பர். இதற்குள் நோய் முற்றிவிடும். பிறகு மாற்று மருத்துவம் ஏதாவது செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து சித்த மருத்துவரிடம் வருவர்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, நோய் மிகவும் முற்றிய நிலையில் குணமாக்குவது கடினம்.
ஒரு சில நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
“என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே நல்லது” என்ற கட்டுரையில் (இந்த கட்டுரை (http://siragu.com/?p=18084) இந்த இணையதளத்திலேயே உள்ளது) இந்த நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.
ஒரு உதாரணத்திற்கு வெண்புள்ளி நோயை வைத்து விளக்குகிறேன்.
வெண்புள்ளி நோயை சித்த மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்தி விடமுடியும். ஆனால்,
mutriya noikkaana maruthhuvam5
•    நோய் ஆரம்பிக்கும் போதே உதடு, ஆண்குறி போன்ற இடங்களில் தோன்றினால் குணமாவது கடினம்.
mutriya noikkaana maruthhuvam6

•  வெண்படை உள்ள இடத்தில் உள்ள தோல் மட்டுமல்லாமல், அந்த இடங்களில் உள்ள முடிகளும் (Hair) சேர்ந்து வெண்நிறம் அடைந்தால் நோய் குணமாவது கடினம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 24 January 2016

சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா


Student commits suicide
இந்திய ஐக்கிய குடியரசு எவ்வித மதத்தையும் சாராதது. இந்திய சட்டத்தின் முக்கிய அம்சம் அனைத்து இந்தியர்களும் சமம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் அனைத்து அரசுகளும், இதை குப்பையில் தூக்கியெறிந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த சட்டமீறலின் கோரத்தாண்டவம் பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்து விண்ணைத் தொட்டுவிட்டது. எப்படியெல்லாம் அரசாளக்கூடாதோ அப்படியெல்லாம் ஆண்டு வருகிறது இந்த கொடுங்கோலரசு.
பட்ட இடத்திலேயே அடி படுவது போல் மீண்டும் ஒரு பெரும் துயரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்துள்ளது. ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் நீக்கியது. அனைவரும் நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படிப்பும், வாழ்வும் பல்கலைக்கழகம் கொடுக்கும் மானியத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை நீக்கியதற்கு சரியான காரணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் மீது நடவடிக்கையெடுக்கும்படி மத்திய அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு, இவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். ஆனால் உண்மையோ வேறு, இவர்களை நீக்கியதின் காரணம், இவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுவந்ததும், இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதும்தான்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Saturday 23 January 2016

என் அப்பா(சிறுகதை-இறுதிப்பகுதி)


my father2
(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு)
என் அப்பாவின் வாழ்வில் நிகழ்ந்ததை நினைத்தால் என் இதயமே அவருக்காக இரத்தம் வடிக்கும். “விதியை மதியால் வெல்லலாம்” என்று வாழ்நாள் முழுவதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் எப்படி இடிந்து போயிருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
நான் மதிக்கும் சில சிறப்பான பொருட்களை ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். அதில் என் அப்பாவின் இரு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று கருப்பு வெள்ளைப்படம் கொண்ட அவருடைய உயர்நிலைப்பள்ளியின் மாணவர் அடையாள அட்டை. அதில் ஆளைக் கவரும் தோற்றத்தில் அவர் இருக்க மாட்டார், ஆனால் புத்திசாலி என்பது வெளிப்படும் தோற்றத்துடன், கொஞ்சம் கூச்ச சுபாவம் தோற்றம் கொண்டவராக, அக்காலத்தில் பொதுவாக வழக்கில் இருந்த கருப்பு வண்ண சீருடையில் இருப்பார். மற்றொன்று பள்ளி நாட்களில் அவர் எழுதிய நாடகத்தின் கையெழுத்துப் பிரதி. கருநீல மையில், அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட பதிவின் இறுதியில் 1972 இல் “டாய்” எழுதியது (By Tai, 1972) என்ற குறிப்பிருக்கும்.
இவையிரண்டையும் நான் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் என் தாத்தா வீட்டிற்குப் போன பொழுது ஒரு புத்தகக் குவியலில் கண்டெடுத்தேன். அவற்றைப் பார்த்த பொழுது நான் எவ்வளவு அதிர்ச்சி அடைந்தேன் என்பது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நான் அறிந்தவரை அறுவையான, பலவீனமான மனிதராக, புகை பிடிப்பதும், சீட்டு விளையாடுவதும், சீன சதுரங்கம் விளையாடுவதும், குடிப்பதும் எனப் பொழுதைக் கழிக்கும் என் அப்பாவினுடையவை அவை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்பொழுதாவது புன்னகைக்கும் அவர், என்னை அரவணைத்து முத்தமிட்டதையோ, என்னுடன் பேசி என் இன்ப துன்பங்கள், அச்சம், கவலைகள் என எதிலும் பங்கு கொண்டதையோ நான் அறிந்ததில்லை. என் பள்ளியில் தேர்வுகளில் நான் பெறும் மற்றொரு முதல் மதிப்பெண் மட்டுமே அவருக்கு மகிழ்ச்சியைத்தரும்.

என் அப்பா குடித்திருக்கும்பொழுது அவரை எனக்குப் பிடிக்கும், அப்பொழுதுதான் அவர் அதிகம் பேசுவார். அந்தச் சமயம் அவர் அரசியல், வரலாறு என்று பேசுவதை விரும்புவார். ஒருமுறை குடித்திருந்த பொழுது கவிதை ஒன்றை எழுதினார். அதன் கடைசி இரு வரிகளும் எனக்கு நினைவிருக்கிறது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Android, Apple செயலிகள் மூலம் செல்வம் ஈட்டுங்கள்


android apple4
செல்வம் ஈட்டுவதற்கு ஏராளமான வழிகள் இவ்வுலகில் ஏற்கனவே உள்ளன, புதிதாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. Smart Phones எனப்படும் அலைபேசிகள் அதிகமாக மக்கள் கைகளில் வலம்வர துவங்கிய பிறகு உலகெங்கும் ஏராளமான மாற்றங்கள் பல்வேறு தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வணிகத்தின் சில முக்கிய அங்கங்களை இத்தகைய அலைபேசிகள் புரட்டிப்போட்டுள்ளன. எதிர்காலத்தில் இடைத்தரகர்களே இல்லாத நிலை இவற்றின் மூலம் வரக்கூடும். உற்பத்தியாளர் அவரிடமிருந்து நுகர்வோர், என்று நேரடியான தொடர்புகளை இத்தகைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தி ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் வழக்கங்களை ஒரே நாளில் மாற்றுகின்றன.
android apple5
இத்தகைய அலைபேசிகளுக்கு என்று செயலிகள் எனப்படும் சிறிய மென்பொருட்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களால் தினம் தினம் ஏற்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இவை நமது தினசரி வாழ்வை எளிமைப்படுத்தும் வகையில் எண்ணற்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. மிக முக்கியமான தகவல்களை கையடக்கக் கருவியில் இவை தருகின்றன. உதாரணமாக,பெருநகரங்களில் ஓடும் தொடர்வண்டிகளின் நேரத்தை குறிப்பிட்ட ஒருவர் செயலிகளைக் கொண்டு அறிந்து தனது பயணத்திட்டத்தை நேரத்தை வீணாக்காத அளவில் அமைத்துக்கொள்ள முடியும். இதுபோல வங்கிகளின் தகவல்கள், அரசுத் தகவல்கள், நாட்காட்டிகள், சமையல்குறிப்புகள், மொழி அகராதிகள், விளையாட்டுக்கள், பயன்படு தகவல்கள் போன்ற ஏராளமானவற்றை செயலிகள் மூலமாக நாம் நுகர முடியும்.

முன்பு ஒருவர் குறிப்பிட்ட சொல்லுக்கு பொருள் தேடவேண்டும் என்றால் நூலகத்திற்கு சென்று அகராதியில் தேடவேண்டிய நிலை மாறி, இன்று அலைபேசியில் அகராதிகளை செயலிகள் மூலமாகவே பயன்படுத்த முடியும். திடீர் பயணங்களுக்கான விமானம், தொடர்வண்டி, பேருந்து போன்றவற்றின் புறப்படும் நேரங்களை வினாடிகளில் அறிய முடியும்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 January 2016

செம்மஞ்சேரி மாணவர்களுக்கு சிறகின் வெள்ளநிவாரண உதவி


nivaarana nidhi15
சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் ‘செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு’ உள்ளது. இது சென்னை மாநகராட்சியின் 200ஆவது வார்டாக இருந்த போதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோமையர் மலை ஒன்றிய எல்லைக்குள் உள்ளது. ஆகவே, இங்குள்ள மக்கள் சென்னைக்கும் காஞ்சிபுரத்துக்குமாக அலைக்கலைக்கப்படுகிறார்கள். இங்கு சுமார் 6,700 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1800 வீடுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதம் உள்ளவற்றில் சென்னை மாநகரின் 23 குடிசைப் பகுதிகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதன் விவரம்:
1.சீனிவாசபுரம், 2. நொச்சிக்குப்பம், 3. தியாகராய நகர், 4. நம்பிக்கை நகர், 5. திடீர் நகர், 6.சத்யா ஸ்டுடியோ அருகில், 7. ஸ்டாலின் நகர், 8.கோட்டூர்புரம், 9.தனக்கோடிபுரம், 10. நுங்கம்பாக்கம், 11.மைலாப்பூர், 12.தேனாம்பேட்டை, 13.சைதாப்பேட்டை, 14. ஓட்காட் குப்பம், 15. ஓசூர் குப்பம், 16. திருவான்மியூர் குப்பம், 17. சூளைமேடு, 18. பெசன்ட் நகர், 19. அடையார், 20. பட்டினப்பாக்கம், 21. டுமீங் குப்பம், 22. சத்யா நகர், 23. பாரதியார் நகர்.

இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள். இவர்கள் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக உள்ளனர். முன்பு,இவர்களின் வாழ்வாதாரம் அருகிலேயே இருந்தது. இப்போது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையான சூழலில் வசிக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 20 January 2016

தமிழர் பண்பாட்டில் கோலங்கள்


thamilar panpaattil kolangal2
தமிழர்களின் வீட்டு வாசலை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஒற்றை இழையில் இழைந்தோடும் கம்பிக் கோலங்கள், அழகினை மையமாகக் கொண்டது மட்டும்தானா? எந்தக் காலத்தில் இருந்து இவ்வரை கோலத்தை நாம் வாசலில் இடத் தொடங்கினோம் என்ற கேள்விகளெல்லாம் என் நெஞ்சில் நிழலாடத் தொடங்கிய காலத்தில் எனக்குக் கிடைத்த விடைகளே இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோலக்கலையின் தோற்றம்:
இன்று நாம் குறிப்பிடும் கோலமிடுதல், பல்வேறு பரிணாம வளர்ச்சியினைப் பெற்று வந்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களிலிருந்து பெறமுடிகிறது.

தமிழர்களின் குறியீடுகளாகப் பயன்படுத்திய ஓவியங்களில் புள்ளியிட்டுக் கொள்ளுதல் என்பது கற்கால மனிதன் தொட்டு காணப்படும் முறையெனலாம்(இராசு. பவுன்துரை, 2004,ப.57) என்று கூறுவதிலிருந்து புள்ளியிட்டு வரைந்த முறை நம்மிடையே மிகப் பழங்காலந்தொட்டே இருந்துவந்துள்ளமையினை அறிய முடிகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 January 2016

மேரிலாந்து “காக்கிஸ்வில் நண்பர்கள் குழு” ஏற்பாட்டில் களைகட்டிய “அமெரிக்காவில் உழவர் திருவிழா!”


Parai Puliyaattam Silambu

உலகுக்கெல்லாம் உணவு படைக்கும் உழவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு நன்றி போற்றும் விதமாகவும், மண்மணம் மாறாத பாரம்பரிய மரபுவழியில் கொண்டாடப்படுவதே நமது பொங்கல் பண்டிகை.

தமிழகம் தாண்டி பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், அமெரிக்காவில் வாசிங்டன்/பால்டிமோர் அருகில்  மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் காக்கிஸ்வில் நண்பர்கள் குழுவினர் இணைந்து, அத்தகு உழவர்களின் பெருமையை நமது அடுத்த தலைமுறையினர்க்கும், தமிழர்கள் அல்லாத வேறு மொழி பேசும் இந்திய அன்பர்களுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும் நமது பண்பாட்டு விழுமியங்களை, பாரம்பரிய மகத்துவங்களை, பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தவும், அவற்றின்பால் அவர்களை ஆற்றுப்படுத்தவும் நோக்கம் கொண்டு  ‘உழவர் திருவிழா’வை சென்ற சனவரி 9ஆம் நாளன்று வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 January 2016

என் அப்பா(சிறுகதை)


my father2
(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு)
my father13
பல ஆண்டுகளாக நான் என் அப்பாவை வெறுத்திருக்கிறேன். என் பார்வையில், உலகிலேயே பொறுப்பற்ற ஒரு அப்பா என்றால் அது அவர்தான். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் பணம் எதுவும் சம்பாதித்ததில்லை. குடும்பமாக பொழுதைக் கழிக்கும்பொழுது அதில் மகிழ்ச்சி அடையாதவர், முதல் ஆளாக வெளியேறிவிடுவார். தனது பிள்ளைகள் பள்ளியில் மகிழ்ச்சியாகப் படிக்கிறார்களா என்று அவர் கவலைப்பட்டதில்லை, ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நாங்கள் மதிப்பெண் பெறாவிட்டால் அவருக்குக் கோபம் மட்டும் வரும். அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவார், அதற்குக் காரணமும் எனக்குத் தெரியாது.

“யாரை நீங்கள் குறை சொல்ல முடியும்? எல்லாம் உங்கள் தலையெழுத்து” என்று அம்மாவும் பதிலுக்குக் கத்துவார். அம்மா தனது நினைவிலிருந்து முப்பதாண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் சொல்லும்பொழுது அப்பா அமைதியாக இருப்பார், அறையின் மறுபக்கத்தை நோக்கித் திரும்பி தனது சிகரெட்டைப் பற்ற வைப்பார். அம்மா அவரது மனதின் வலியை நினைவுபடுத்தும் பொழுது, அப்பாவின் சிகரெட்புகை வழியே அவர் கண்களின் கண்ணீரைப் பார்த்த நினைவுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 January 2016

சிறகின் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு செயலி


siragu seyali1சிறகு இணையதளத்தை நீங்கள் தற்போது செயலி மூலமாகவும் வாசித்து மகிழலாம். எங்களது ஆன்ட்ராய்டு செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு முறை செயலியைத் திறந்து கட்டுரைகளை தரவிறக்கம் செய்துகொண்டால் அவை உங்களது அலைபேசியில் சேகரிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு இணைய இணைப்பு இல்லாமலேயே உங்களால் படைப்புகளை வாசிக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 11 January 2016

வாருங்கள், உங்கள் உடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்


2011-09-07-1417-46(52).jpg
உடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால் செயல் அடிப்படையில் மூன்று விதமான உடல் வாகு உள்ளது.
  1. வாத உடல்
  2. பித்த உடல்
  3. கப உடல்
இதில் உங்கள் உடல் எந்த வகையானது என உங்களுக்குத் தெரியுமா?
எவ்வாறு மூன்று விதமான உடல் உருவாகிறது?
moondru vidha udal3
ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்தே கரு உருவாகிறது. அவ்வாறு உருவாகும் நேரத்தில் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று இயக்கங்களில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே அந்த கரு, உடலாக உருவாகிறது.

வாதம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் வாத உடலாகவும்,பித்தம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வளரும் உடல் பித்த உடலாகவும்,கபம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் கப உடலாகவும் அமைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 10 January 2016

யாதும் ஊரே எல்லா உயிரினங்களும் கேளீர் ; ஜார்ஜ் ஷாலர்


yaadhum oore6
அப்பொழுது அவருக்கு 26 வயதுதான் ஆகி இருந்தது. தனது முனைவர் பட்டப்படிப்பை விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் முடித்த கையோடு முதுகுப்பையை மாட்டிக்கொண்டு தெளிவான சிந்தனையுடன் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கால்பதித்தார். கொரில்லா எனும் மனிதக் குரங்கை அதன் வாழிடத்திலேயே தங்கிப் படிப்பது தான் அவர் நோக்கம். 1960கள் வரை பெரிதாக எந்தவொரு ஆய்வும் கொரில்லா குறித்து மேற்கொள்ளப்படவில்லை.. ஏற்கனவே கொரில்லாக்கள் பற்றி வந்த செய்திகள் பலவும் வேட்டை இலக்கியமாகவே இருந்தன. வேட்டைக்காரர்கள் தாய் கொரில்லாவைக் கொன்று குட்டி கொரில்லாவை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். குட்டியிலிருந்து பழக்கினால் தான் பழக்குவதற்கு எளிதாய் இருக்குமாம். இதனால் அந்த விலங்கினமே அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
வேட்டைக்காரர்கள் இப்படி இருந்தால் காட்டு விலங்குகளைப்பற்றி படிப்பவர்களோ ஆய்வுக் கூடத்திலும் வகுப்பறையிலும் விலங்குக் காட்சி சாலையிலும் மட்டுமே விலங்குகளைப் பற்றி படித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை அறுத்து படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 6 January 2016

உடன்பிறப்பு(சிறுகதை)


udanpirappu1
டிசம்பர் மாதக் கடுங்குளிர் -7 டிகிரியைத் தொட்டிருந்தது. காலை 9 மணியான போதும் போர்வைக்குள் இருந்து வெளிவர மனமில்லை. நண்பன் யோஹான் வீட்டில் மதிய உணவிற்கு வருவதாக வாக்கு கொடுத்தது ஞாபகத்துக்கு வர, வேறு வழியில்லாமல் எழுந்து கிளம்பினேன்.
வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் லூவன் நகரமும் வெள்ளைப் போர்வையைப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெள்ளை வெளேரெனக் காட்சியளித்தது. ஆள் அரவமற்ற தெருக்களின் வழியே, எதிரே தென்பட்ட இந்தியரைப் பார்த்து “நமஸ்தே ஜி” சொல்லிவிட்டு, குளிரில் நடுங்கியவாறு லூவன் ரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் பூட்டி இருந்தன.

ஹசல்ட். நான் வசிக்கும் லூவன் நகரிலிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம். சரியாக 11.12 க்கு ஹசல்ட் செல்லும் ரயில் வந்து நின்றது. அதனுள் ஏறி அமர்ந்தபின்தான் சற்று இதமாக உணர்ந்தேன். படத்தில் மட்டுமே பார்த்திருந்த பனி சூழ்ந்த இடங்களை நேரில் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் ரயிலில் செல்வது வியப்பாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. மதியம் 12.15 க்கு ஹசல்ட் ரயில் நிலையத்தை வந்தடைந்தேன்.
என்னை வரவேற்க நண்பன் யோஹான் காத்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் அவனுடைய காரில் ஏறி, அவன் வீட்டை நோக்கிச் சென்றோம். வீடு வரவும், அவன் மனைவி ஷானா வாசலில் வந்து என்னை வரவேற்கும் விதமாக கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்தாள். பெல்ஜியம் நாட்டில் விருந்தினரை வரவேற்க கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுப்பது வழக்கம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 January 2016

சங்க பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் பெண்ணின் இருப்பு


sanga penpaar pulavargal5
ஒரு நாட்டின் மாண்பையும், பண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தாலே அறியலாம். அவ்வடிப்படையில் வாழ்க்கை நெறி, மக்கள் பாகுபாடு, உணவு, உடை, தெய்வ நம்பிக்கை, நிமித்தங்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள், போர்க்கருவிகள், அறநிலை, வீரர் மரபு, அரசர்கள், புலவர்கள், மரம் செடி கொடிகள், பூக்கள், விலங்கினங்கள், பறவைகள், பழமொழிகள், உவமைகள் போன்ற இன்ன பிற செய்திகளை இவ்வியல் ஆராய்கிறது. சங்க இலக்கியம் அகம், புறம் என்னும் நெறியில் அமைந்து மக்கள் வாழ்வினைப் பதிவு செய்துள்ளது. “புலமை வல்ல மகளிராக நாம் தெளிந்தோரின் பாடல்கள் சங்கத்து நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுள் மட்டுமே காணப்படுகின்றன. சங்க வரலாறும், போர் வரலாறும், சமுதாய மரபும், கலையியலும், உறிவியலும் பின்னிப் பொலியும் பதிவிலக்கியமாகவே சங்கப்பாடல்கள் திகழ்கின்றன” என்று டாக்டர் வ.சுப. மாணிக்கம் விளக்குகிறார். வாழ்க்கை நெறி வாழ்வில் ஆர்வத்தையும் ஆற்றலையும் மக்களுக்குப் புலவர்களே வளர்த்தனர், “தனிமரம் தோப்பாகாது” என்பது போல தனிமை வாழ்வு சிறந்த வாழ்வாகாது. சேர்ந்து வாழும் வாழ்வே சிறந்தது என்பதை,
“வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்”
எனப் புறநானூறு பறைசாற்றுகிறது.
திருமணம்:

sanga penpaar pulavargal1
இல்லறத்தின் நுழைவாயிலான திருமணம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத இடத்தைப்பெறுகின்றது. ‘திருமணம்’ என்பது தற்போது சமுதாயத்தின் ஒரு தகுதியாகக் கருதப்படும் தேவை எனப்படுகிறது. ‘திருமணம்’ என்ற சொல் ‘திரு’ மணம் எனப் பிரிக்கப்படுகிறது. மணம் என்பதே தமிழரின் பழைய மரபு “ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு இனியவளாக வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக்கொள்வதனாலேதான் மணம், திருமணம் என்னும் பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன” என்கிறார் சசிவில்லி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 4 January 2016

பயணமும் படங்களுமே என் வாழ்க்கை: சாதிக்கும் சாய்பிரியா


Saipriya (7)
ஆடை வடிவமைப்புத் துறையில் நல்ல வேலை, கை நிறைய ஊதியம் என்று போன தன் வாழ்க்கையில், கேமரா மீது கொண்டுள்ள காதலால் தனக்குப் பிடித்தமான புகைப்படத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த சாய்பிரியா. இந்தியாவின் பிரபலமான திருவிழாக்களை உயிரோட்டமான புகைப்படங்களாக கேமராவுக்குள் சிறைபிடித்து வருகிறார். மேலும் இந்திய கலாச்சாரத்தை வண்ணங்கள் சிந்தும் புகைப்படமாக்கி ரசிக்க வைக்கிறார். இவரது கலைப்பார்வையும் ஒளிநுட்ப நேர்த்தியும் பல புகைப்பட விருதுகளை வென்று தந்துள்ளது. கேமராவும் கையுமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து படங்கள் எடுத்துள்ளார். புகைப்படத்தின் எல்லா களங்கள் மீதும் இவர் கண் சென்றாலும் “டிராவல் போட்டோகிராபி’ எனப்படும் பயணப் புகைப்படங்கள் எடுப்பதில் அதீத ஆர்வம் இவருக்கு. சாய்பிரியாவின் ‘Castle Mountains’ என்ற முகநூல் பக்கம் சமூக வலைத்தளங்களில் அறியப்படுகிறது. சாய்பிரியாவுடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
சாய்பிரியா: பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். அப்பா சஞ்சீவி பிரபல ‘ரேமண்ட்ஸ்’ ஆடை நிறுவனத்தில் ஆலோசகராக உள்ளார். அம்மா இப்போது இல்லை. கோவையில் ஆடை வடிவமைப்பு படிப்பை படித்து முடித்து அது தொடர்பான பணியில் சேர்ந்தேன். சிறிது காலத்திலேயே புகைப்படத் துறைக்கு தாவிவிட்டேன்.
ஆடை வடிவமைப்பு பணியிலிருந்த உங்களுக்கு புகைப்பட ஆசை எப்படி வந்தது?

Saipriya (9)
சாய்பிரியா: சுற்றுலாப் பயணங்களில் தோழியின் கேமராவில் விளையாட்டாக புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். நான் எடுத்த படங்களை முகநூலில் வெளியிட்டேன். அவற்றைப் பார்த்து நிறைய பாராட்டுக்கள். ஒளி நுட்பம், கேமரா கோணம் எல்லாம் சிறப்பாக இருப்பதாக கூறினார்கள். இத்தகைய வரவேற்பும் பாராட்டுக்களும் புகைப்பட கலைத்துறையில் சாதிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. அமெரிக்காவில் இருக்கும் அக்காவின் உதவியுடன் Digital SLR கேமரா வாங்கி புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல்- இறுதிப் பகுதி


kasi aananthan nerkaanal fi
கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழின் நிலை என்ன? இதை மேலும் செம்மைப்படுத்த தாங்கள் கூறும் வழிமுறை என்ன?
பதில்: இதை நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அநேகமாக ஜெர்மனி, பிரான்சு, லண்டன் போன்ற இடங்களிலெல்லாம் தமிழ்ப்பள்ளிகளை, அங்கு வாழுகிற தமிழீழ மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்தவரை தமிழீழ மண்ணில் இருக்கிற அந்த தமிழ் தேசிய இனத்தன்மை அழியாத குழந்தைகளாக அவர்களை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். நான் நினைக்கிறேன், தமிழீழ விடுதலை கிடைக்கின்ற வரை உலகெங்கும் பரவி வாழ்கிற புலம்பெயர்ந்த தமிழர்களால், அந்தத் தமிழர்களை தமிழ் மக்களாக காப்பாற்றி வைத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அந்த மண் மீதான பற்றும், அந்த மொழியின் மீதான பற்றும் அந்த மக்களுக்கு இருக்கும்வரை, அவர்கள் அந்த மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன். காரணம் அந்த உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது.

kaasi ananthan nerkaanal2
திரும்பவும் போர்ச்சுகல் நாட்டுக்கு போகவே முடியாது என்ற நிலையில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தில் மட்டக்களப்பில் வந்து குடியமர்ந்த போர்ச்சுக்கீசியர்களின் சில குடும்பங்கள் இன்றும் மட்டக்களப்பில் வாழ்கின்றனர். இன்றைக்கும் அவர்களுடைய வீட்டில் போர்ச்சுக்கீசிய மொழிதான் பேசுகிறார்கள். வெளியில் தமிழ் பேசுகிறார்கள், ஐநூறு ஆண்டுகள். ஆனால் இந்தத் தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உண்டு, எங்கு போனாலும் அடுத்தவர்களாய் மாறிப்போகிற குணம். மொரிசியசு, பிஜி போன்ற நாடுகளிலெல்லாம் கூலிகளாகப் போன தமிழர்கள், இன்று அவர்களுக்குத் தமிழ் தெரியாது, பேச தமிழ் வராது. தென்னாப்பிரிக்காவிலும் தான். அந்தநிலை இன்று உலகில் சிதறி வாழுகிற, ஈழத்தில் சிங்கள இனவெறியர் கொடுமையால் சிதறிப்போன தமிழர்களுக்கு வரக்கூடாது, வராது என்று நான் நம்புகிறேன். அந்த மக்களைக் காப்பாற்றி விடுதலை பெற்ற தமிழீழத்திற்கு நாங்கள் என்றோ ஒரு நாள் அழைத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இது முன்பனிக்காலம்


2011-09-07-1417-46(52).jpg
நோயற்ற நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் வாதம், பித்தம், கபம் எனும் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அவைகளுக்கு தக்கபடி உணவு முறைகளையும் மாற்றுவதே ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆண்டு முழுவதும் ஒரே விதமான உணவை உண்ணும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல.
சரி, முதலில் ஒரு ஆண்டில் என்னென்ன பருவ மாற்றங்கள் வருகின்றன என பார்ப்போம்.
munpanikaalam2
ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்துள்ளோம்.
கார்காலம் – ஆகத்து – செப்டம்பர்
கூதிர் காலம் – அக்டோபர் – நவம்பர்
முன்பனிக்காலம் – திசம்பர் – சனவரி
பின்பனிக்காலம். – பிப்ரவரி – மார்ச்சு
இளவேனில் காலம் – ஏப்ரல் – மே
முதுவேனில் காலம் – சூன் – சூலை
இனி எந்தெந்த காலங்களில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதற்கேற்ப உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பனிக்காலத்தை பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.