Monday 4 January 2016

கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல்- இறுதிப் பகுதி


kasi aananthan nerkaanal fi
கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழின் நிலை என்ன? இதை மேலும் செம்மைப்படுத்த தாங்கள் கூறும் வழிமுறை என்ன?
பதில்: இதை நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அநேகமாக ஜெர்மனி, பிரான்சு, லண்டன் போன்ற இடங்களிலெல்லாம் தமிழ்ப்பள்ளிகளை, அங்கு வாழுகிற தமிழீழ மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்தவரை தமிழீழ மண்ணில் இருக்கிற அந்த தமிழ் தேசிய இனத்தன்மை அழியாத குழந்தைகளாக அவர்களை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். நான் நினைக்கிறேன், தமிழீழ விடுதலை கிடைக்கின்ற வரை உலகெங்கும் பரவி வாழ்கிற புலம்பெயர்ந்த தமிழர்களால், அந்தத் தமிழர்களை தமிழ் மக்களாக காப்பாற்றி வைத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அந்த மண் மீதான பற்றும், அந்த மொழியின் மீதான பற்றும் அந்த மக்களுக்கு இருக்கும்வரை, அவர்கள் அந்த மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன். காரணம் அந்த உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது.

kaasi ananthan nerkaanal2
திரும்பவும் போர்ச்சுகல் நாட்டுக்கு போகவே முடியாது என்ற நிலையில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தில் மட்டக்களப்பில் வந்து குடியமர்ந்த போர்ச்சுக்கீசியர்களின் சில குடும்பங்கள் இன்றும் மட்டக்களப்பில் வாழ்கின்றனர். இன்றைக்கும் அவர்களுடைய வீட்டில் போர்ச்சுக்கீசிய மொழிதான் பேசுகிறார்கள். வெளியில் தமிழ் பேசுகிறார்கள், ஐநூறு ஆண்டுகள். ஆனால் இந்தத் தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உண்டு, எங்கு போனாலும் அடுத்தவர்களாய் மாறிப்போகிற குணம். மொரிசியசு, பிஜி போன்ற நாடுகளிலெல்லாம் கூலிகளாகப் போன தமிழர்கள், இன்று அவர்களுக்குத் தமிழ் தெரியாது, பேச தமிழ் வராது. தென்னாப்பிரிக்காவிலும் தான். அந்தநிலை இன்று உலகில் சிதறி வாழுகிற, ஈழத்தில் சிங்கள இனவெறியர் கொடுமையால் சிதறிப்போன தமிழர்களுக்கு வரக்கூடாது, வராது என்று நான் நம்புகிறேன். அந்த மக்களைக் காப்பாற்றி விடுதலை பெற்ற தமிழீழத்திற்கு நாங்கள் என்றோ ஒரு நாள் அழைத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment