Thursday 21 May 2020

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள் – பாகம்-1


siragu ramanathapuram1
சேதுபதிகள் காலத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமைகள்
இராமநாதபுர மாவட்டப் பகுதிகளை ஆண்ட சேதுபதி அரசர்கள் தமிழும், தெய்வீகமும் வளரப் பாடுபட்டவர்கள் ஆவர். இவர்கள் அரசவையில் தமிழ்ப்புலவர்களுக்கு தக்க இடம் அளித்தனர். பல சிற்றிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பெற்றன.
இராமநாதபுர தமிழ் இலக்கிய காலத்தின் வளமான காலம் இக்காலம் ஆகும்.
புராணங்கள், காப்பியம், மான்மியம்
வீரை ஆசுகவி
அரிச்சந்திர புராணம் என்பதை எழுதியவர் வீரை ஆசுகவி ஆவார். இவரின் ஊர் நல்லூர் வீரை ஆகும். இவ்வூர் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும் குறிக்கப் படுகிறது. காப்பியத்திற்கு நிகரான அளவில் அரிச்சந்திர புராணத்தை இவர் செய்துள்ளார். இப்புராணம் திருப்புல்லாணி திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பெற்றுள்ளது.
உமறுப்புலவர்
எட்டய புரத்தில் பிறந்த உமறுப்புவலர் சீறாப் புராணம் எழுதியவர். இவரை கீழக்கரை சார்ந்த வள்ளல் சீதக்காதி என்பவர் கொடையளித்துக் காத்தார். இசுலாமியப் பெருங்காப்பியம் இதனால் எழுந்தது.

திருவாடானை புராணம் என்பதனை திருவாரூரைச் சார்ந்த சாமிநாத தேசிகர் என்பவர் செய்துள்ளார். திருவாடானை மான்மியம் என்ற நூலும் சிற்றம்பல தேசிகர் என்பரால் இயற்றப்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 20 May 2020

இரணியன் அல்லது இணையற்ற வீரன்!!


siragu iraniyan1
புரட்சிக் கவிஞர் என்றால் அது புதுவை தந்த கவிஞர் கனகு சுப்புரத்தினம் தான். அந்த அடையாளத்தை அவருக்கு வழங்கியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியாரின் ஒரே ஒரு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், தந்தை பெரியாரின் எழுத்துக்களைக் கவிதையில் கொணர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே உண்டு!!
அதனால் தான் திராவிடர் இயக்கத்தின் முதல் தளபதியாக திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், பாரதிதாசன் அவர்கள் பற்றிக் கூறும்போது “முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக்கருத்துக்கள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்துப் புதுமைக் கவிகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், கலை நுணுக்கம் முதலியவை பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும்.” என்று குறிப்பிடுகிறார்.

உலக அரங்கில் பாரதிதாசன் அவர்களுக்கு இணையான ஒரு கவிஞரை குறிப்பிட வேண்டுமென்றால் அமெரிக்காவின் வால்ட் விட்மனை கூறலாம். “பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந்தருகிறேன்” என்றார் வால்ட் விட்மன். அதே போல தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் பாரதிதாசன் என்றால் மிகையாகாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/

கல்வி


siragu agimsai1
காந்தியடிகள் கல்வி பற்றியும் தீவிரக் கருத்துடையவராக இருந்துள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். பயிற்றுமொழி பற்றிய அவரின் கருத்துகள் வரவேற்கத்தக்கன.
அந்நிய மொழி வழிக் கல்வி மூளைக் களைப்பை விளைவித்துள்ளது. அதன் சுமை நமது குழந்தைகளின் நரம்புணர்வுகளை அளவுக்கு மீறிப் பாதிக்கிறது. சிறார்கள் பாடங்களை உருபோட்டுத் திணித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களைப் போலித்தனத்திற்கு உட்படுத்துகிறது. சுயமாகச் சிந்திக்கவோ செயல்படவோ அவர்கள் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். இவற்றின் மொத்த விளைவாக அவர்களால் த்hம் பெறும் அறிவைத் தமது குடும்பத்திற்கோ மக்களுக்கோ வடித்து வழங்க இயலாதவர்களாகி விட்டனர். அந்நிய மொழி வழிக் கல்வி என்பது குழந்தைகளைத் தமது சொந்த நாட்டிலேயே நடைமுறையில் அந்நியர்களாக்கி விட்டது என்று காந்தியடிகள் பயிற்று மொழி பற்றிக் கருத்துரைத்துள்ளார். தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருக்குமானால் புதிய மாற்றுக்கல்வி முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவருவேன் என்று காந்தியடிகள் பேசியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 14 May 2020

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள்


siragu ramanathapuram1
இராமநாதபுர மாவட்டம் தென்தமிழகத்தில் அமைந்துள்ள கடற்கரை சார்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கே பாக் ஜல சந்தியும்.   (பாக் நீரிணையம்), வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும், தென் மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன.
பாண்டிய மன்னர்களாலும், நாயக்கர்களாலும், சேதுபதி மன்னர்களாலும் ஆண்டு வரப்பட்ட இப்பகுதி ஆங்கிலேயர் காலத்தில் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டில் மதுரை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் சிலவற்றை இணைத்து உருவாக்கப்பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெ. எப். பிரையண்ட் என்பவராவர். ஆங்கிலேயர் காலத்தில் இம்மாவட்டம் ‘‘ராம் நாடு” என்று அழைக்கப்பெற்றது. விடுதலைக்குப் பின்பு இராமநாதபுர மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இராமயாண காலம் தொட்டு இராமநாதபுரம் பதிவு செய்யப்பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டம் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த்து என்பது தெளிவு. இராமபிரான் குரங்குக் கூட்டங்களை வைத்து பாலம் அமைத்து இலங்கை சென்ற நிலையில் கட்டப் பெற்ற சேது பாலம் இன்னமும் தொன்ப நிலையிலும், இயற்கை நிலையிலும் பெருவியப்பிற்கு உள்ளாக்குகிறது. இவ்வகையில் இராமாயணக் காலம் தொட்டு இராமநாதபுரம் குறிப்பிடத்தகுந்த மாவட்டமாக அமைந்திருந்த்து என்பது கருத்த்த்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 May 2020

சரஸ்வதி என்பது சரஸ்வதிதானா?

சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளாக அகழாய்வுகள் அறிவியல் அடிப்படையில் முன்வைக்கும் தரவுகள் யாவும், தொன்ம இலக்கியங்கள் (அதாவது சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ரிக் வேதம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்) சொல்லும் சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளுடன் முரண்படுவதாக இருக்கிறது.
கீழடியின் தொல்லியல் தடயங்களை தமிழின் சங்க இலக்கியத் தரவுகளுடன் இணைத்துக் காட்ட முடிவது போல சரஸ்வதி ஆறு பற்றிய இலக்கியங்கள் தரும் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்டு 3300 -1300 கி. மு. காலத்திற்குரியதாக அறுதியிட்டுக் கூறப்படும் சிந்துவெளி பண்பாடு என்பது வேதகாலத் தொடர்புடையது என்று கூறவே இயலாது என்பதை ஆய்வாளர்கள் விளக்கமாக எடுத்துரைத்து விட்டனர். காலத்தால் முற்பட்ட சிந்து சமவெளிப்பகுதியில் அமைந்திருந்த இரும்பு காலத்திற்கும் முற்பட்ட நகர அமைப்புகள், குறியீடுகள் கொண்ட அக்கால மொழி, கருப்பு சிவப்பு பானை ஓட்டுச் சில்லுகள், குதிரை குறித்த தரவுகள் அப்பகுதியில் கிடைக்காமை போன்றன சிந்துவெளிப்பண்பாட்டின் தனிச்சிறப்பு கொண்ட அடையாள முத்திரைகள்.

காலத்தால் பிற்பட்ட (1500 கி. மு.) வேதகால இலக்கியங்கள் நகர வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடாதவை, இரும்பு ஆயுதங்கள் குறித்து கூறுபவை, குதிரைகள் பற்றிய செய்திகள் தருபவை, வண்ணச்சுடுமண் பாண்டங்களைப் பயன்படுத்திய மக்களைக்குறிப்பவை, அத்துடன் அவை எழுதாக் கிளவி என்றும் எழுத்தில்லாத மொழி என்றும் குறிப்பிடப்படும் மொழியின் தனிச் சொத்து. ஆகவே இந்த உண்மை புரிந்தவுடன் சிந்து சமவெளி நாகரிகம் என்பது சரஸ்வதி ஆறு நாகரிகம் என்று கூறுவதை ஒரு கட்டுக்கதை என்று உணர்ந்து தவிர்த்துவிடுவது அறிவுடைமையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 May 2020

காந்தியடிகளும் பெண்மையும்

siragu agimsai1
காந்தியடிகள் பெண்களையும் ஆண்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார். ஆணும் பெண்ணும் அடிப்படையில் ஒன்றே. அவர்களின் ஆன்மாவும் ஒன்றே. இருவரும் அதே வகையான உணர்வுகளுடனும் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். ஒருவர் மற்றொருவரை நிறைவு செய்கின்றனர். ஒருவர் மற்றொருவரின் சுறுசுறுப்பான வாழ்க்கையின்றி வாழ்வதற்கில்லை.
பெண்கள் தாய்மை என்ற கடமையை ஏற்கின்றனர். இது ஆண்களைவிட அதிகமான கடமைகளுக்கு வழி வைக்கின்றது.  பெண் அகிம்சையின் அவதாரம். குழந்தையைப் பத்து மாதம் சுமப்பது, கருவுக்கு உணவூட்டி வளர்ப்பது, போன்றன அவளின் கடமைகள், துன்பங்கள். இவற்றில் அவள் இன்பம் காண்கிறாள். பிரசவ வேதனைக்கு ஒப்பான வேதனை வேறு எதுவும் உண்டா. ஆனால் ஓர் உயிரைப் படைப்பதினால் உண்டாகும் ஆனந்தத்தில் அவள் அந்த அவஸ்தைகளையெல்லாம் மறந்து விடுகிறாள்.

அதன்பின் குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கிறாள். அன்போடு வளர்க்கிறாள். அந்தக் குழந்தைகள் அன்பினை உலகிற்குத் தரட்டும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சர் பிட்டி தியாகராயர் – ஓர் அறிமுகம்


siragu sar.pitti.thiyaagaraayar1
ஏப்ரல் 27 1852 இல் பிறந்து, அதே மாதம் ஏப்ரல் 28 1925 இல் மறைந்த சர் பிட்டி தியாகராயர், நீதிக்கட்சி தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். அவரைப் பற்றி, அறிஞர் அண்ணா அவர்கள் 30.6.1950 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தியாகராயரது நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,

”திராவிடர்” என்ற உணர்ச்சியும் “திராவிட நாடு” என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்துவந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப் போரிட்டுச் சீர்கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரச்சாரங்களைவிட அறிவுப் பிரச்சாரம் தான் முக்கியமானது என்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் தொடங்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றிபெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அன்று தியாகராயர் மத விடயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை, ஏனென்றால், முதலில் அவர், திராவிடர்களுக்குத் தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விடயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 6 May 2020

கொரோனா ஊரடங்கு காலமும், மத்திய பா.ச.க அரசின் திரைமறைவு செயல்பாடுகளும்!


siragu coronavirus6
உலகெங்கிலும் அதி வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த வேளையில், பொருளாதாரத்திலும், மருத்துவத்திலும் உயர்ந்த நிலையிலுள்ள வளர்ந்த நாடுகளே இதை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. உலகளவில், நோய்த்தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்திருந்தது. உயிரிழப்பு 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் மிகுந்த துயரத்தை தருகிறது. என்ன செய்வது என்றே புரியாத நிலையில் தான் உலக நாடுகள் இருந்து வருகின்றன. இந்திய அளவில், பரவியவர்களின் எண்ணிக்கை 30,000 த்திற்கு மேலேயும் , உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியாமல், பல வல்லரசு நாடுகள் தவித்து வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மிகுந்த முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. உலகமே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியை நோக்கியே பயணித்து வரும் நிலையில், இந்திய அரசு மட்டும் மக்களை பாதிக்கும் வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 1 May 2020

வாசிப்பு எனும் மாபெரும் மருந்து!




Fletchers Bakery, Sheffield
புத்தக வாசிப்பு என்பது மனிதகுலத்திற்கு மட்டுமே கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிசம். மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, தன்னுடைய கருத்துகளை, எண்ணங்களை, ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருந்திருக்கிறான். அது சைகை மூலமாகவோ, சித்திரங்களை வரைதலின் மூலமாகவோ, ஒலி எழுப்பியோ மற்றவர்களுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். இதன் நீட்சியாகத்தான், மொழி உருவாகி இருக்கிறது என்பது வரலாற்று உண்மை. ஆரம்பகாலத்தில் வெறும் பேச்சாக மட்டுமே இருந்த மொழி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, எழுப்பப்படும் ஒலியை பிரதானமாகக் கொண்டு, எழுத்துகளை உருவாக்கி, அதன்முலம் தங்கள் கருத்துகளை, அனுபவங்களை நம் மூதாதையர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதன் தொகுப்புகள் நமக்கு ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்களாகிய நாம் எழுத, படிக்க அறிந்திருக்கிறோம் என்பது கீழடி மூலம் தற்போது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எழுத்து என்பது மனிதன் சிந்தித்து, நாகரீகமடைந்து, தன் சமூகம் சிறப்புற வாழ துவங்கியத்தின் அடையாளமாக தான் பார்க்கப்படுகிறது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு, எழுத்துகள் பரிமளித்திருக்கின்றன, வளர்ச்சியடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும், அந்த எழுத்துக்களின் மூலமாகத்தான், அந்த காலகட்டத்தின் வாழ்வியலை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய ஒரு சான்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 29 April 2020

முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள்


siragu mullaippaatu2
பத்துப்பாட்டு வரிசையில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள முல்லைப்பாட்டு நூல் 103 அடிகளைக் கொண்ட பாடல். நூலின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர். சோழநாட்டைச் சேர்ந்த வணிகராக இவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. நேரிசை ஆசிரியப்பாவில் இந்நூலை எழுதியுள்ளார் நப்பூதனார். பாடலில் பாடப்பட்டவர் பெயர் இன்னதென்றுக் குறிப்பு இல்லாவிட்டாலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது. நப்பூதனார் நெடுஞ்செழியனின் அவைப்புலவர் என்றும் கருதப்படுகிறது. போருக்குச் சென்ற தலைவன் தான் மீண்டும் கார்காலத் துவக்கத்தில் திரும்புவதாக அறிவித்துச் செல்ல, அவன் வரவை எதிர்நோக்கித் தலைவியும், தலைவியின் நினைவாகப் போர்முனையிலிருந்த தலைவனும் வருத்தமுற்று, பின் மீண்டும் இணைவதைச் சொல்கிறது முல்லைப்பாட்டு நூலின் கருத்து. பாடலில் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வடமொழிச் சொற்கள் இருப்பதாகவும் பாடலில் காலம் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு என்பதும் மறைமலையடிகளின் கருத்து.

கார்காலத்தின் இயற்கை, தலைவியின் தனிமை உணர்வு, போர்க்களத்தின் சூழல் ஆகியன செம்மையாக விவரிக்கப்படுவதாகத் தமிழறிஞர்களின் பாராட்டைப் பெரும் இலக்கியம் முல்லைப்பாட்டு. முல்லை சார்ந்த ஒழுக்கங்களாகப் பாடலில் இடம்பெறுவது; பகை வெல்லும் பொருட்டு, வேற்றோர் அரசனின் நாடு கைப்பற்றும் நோக்கத்துடன் தலைவன் தானே போருக்குச் செல்லுதலான வஞ்சித்திணை புறவொழுக்கமும்,அதனால் பிரிந்த தலைவியும் தலைவனும் தனது காதல் துணையை எண்ணிக் காத்து இருத்தலும் இருத்தல் நிமித்தமுமான அகவொழுக்கமும் பாடலில் காணப்படுகிறது. இச்சூழல் உணர்த்தும் நிகழ்வை இக்காலத்தில் இயக்குநர் மணிரத்தினம் தளபதி படத்தில்,”சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி” என்ற பாடலில் மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியதையும் [https://youtu.be/6PPpbSB0iME] இங்கு நினைவு கூரலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 April 2020

கரோனாவும் உலக நாடுகளில் அதன் பரவலும்


siragu coronavirus6
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்ப்பித்து உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ள ஒரு வித வைரஸ் இந்த கரோனா. இதன் நோய் பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.
உலகம் முழுக்க பரவினாலும், இதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி மக்கள்தொகை கொண்ட ஆசியா, ஆப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 15% கொண்ட ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்கியுள்ளது. ஏன் தென் அமெரிக்காவில் கூட அவ்வளவு பாதிப்பு இல்லை.
காரணம் என்ன?

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவ மிக முக்கியக்காரணம் விமான போக்குவரத்து. ஆனால் உள்நாட்டிற்குள் பரவுவது அந்நாட்டில் தட்பவெப்ப நிலை மற்றும் அந்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சர்வோதயம்


siragu agimsai1
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த நூல் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல். இதனை எழுதியவர் ரஸ்கின் ஆவார். இவரின் இந்நூலைக் குஜராத்தி மொழியில் காந்தியடிகள் சர்வோதயம், அதாவது சர்வ ஜனநலம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அவருக்குள் பெருத்த மாற்றத்தை இந்நூல் ஏற்படுத்தியது. இந்நூல் ஏன் தன்னைக் கவர்ந்தது எப்படி அதற்கான காரணங்கள் என்ன என்று காந்தியடிகளே சொல்கிறார்.
எல்லாருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.
தங்கள் உழைப்பினால் தங்கள் வாழ்வினை நடத்த வேண்டியிருப்பதால் அனைவருக்கும் ஒரே வகையான உரிமை உண்டு. உயர் தொழில் செய்பர்கள், கீழ்நிலைத் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. விவசாய வாழ்க்கை, பாட்டாளி வாழ்க்கை, கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கை போன்ற அனைத்துமே வாழ்வதற்கு உகந்த மென்மையான வாழ்க்கை முறைகள்.
இந்த மூன்று கருத்துகளை அந்நூல் காந்தியடிகளுக்குத் தெரிவித்தது கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல்.

இந்நூலின் வழியாகச் சர்வோதயம் அறிமுகமாகிறது காந்தியடிகளுக்கு. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள் என்ற நன்னிலை அவருக்குள் உதயமாகிறது. கிராமமக்கள், நகர மக்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. இதற்கு ஒரே வழி தன்னிறைவான வாழ்க்கையை அனைவரும் அடைதலே ஆகும். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 24 April 2020

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னாரா பெரியார்?


siragu karpu4
பெரியரைப் பற்றி பல அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய இணையக் காலத்தில் தான் என்றல்ல, அவர் என்றைக்குக் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி, பார்ப்பன ஆதிக்கத்தை அடக்கியே தீருவேன் என்று சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினாரோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய அவதூறுகளும் தொடங்கி விட்டன. இதனைப் புராணக் கதைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். கதைகளில் அரக்கர் எனச் சொல்லப்படுவோர் அனைவருமே திராவிடர் இன மக்கள் தான் அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்றவர்களே ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த அரக்கர் என்பவர்கள் தேவர்களுக்கு (பார்ப்பனர்கள்) இடையூறாக இருந்தனர் என்றும், அவர்கள் மிக மோசமானவர்கள் என்றும் கதைகளில் எழுதி வைத்தவர் பார்ப்பனர்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்டால் அவர்கள் கெட்டவர்கள் என்று கதை கட்டுவது அவர்களுக்கு வழக்கம். அந்த வகையில் தான் திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரின் மீதும் ஆதாரம் இல்லா கதை எழுதிப் பரப்பி விடுவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நோய்நாடி நோய்முதல் நாடி…


siragu coronavirus2
ஊரடங்கு – இன்று நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நாள்தோறும் எதிரொலிக்கும் வார்த்தை. தமிழ் அகராதியில் நாமனைவரும் மிக அதிகம் பயன்படுத்தும் வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கும். விலகியிரு, தனித்திரு, வீட்டிலிரு – இவையெல்லாம் இந்த பந்தயத்தில் அடுத்ததடுத்து பதக்கம் பெறும் சொற்கள். தெருவெல்லாம் டிராபிக்ஜாம், ஜவுளிகடை, பாத்திரக்கடை, நகைக்கடை, பரோட்டாகடை என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த நாம் எப்படி இப்படி ஒடுங்கிபோனோம்? ஆஸ்பத்திரி அல்லது வீடு இந்த இரண்டு இடங்களைத் தவிர இன்று வேறு எந்த இடத்திலும் ஒரே மனிதனை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடியாது. ஏன்? எவ்வாறு? கொரோனா – ஆடாத ஆட்டம் ஆடிய மானுடத்தை பெட்டி பாம்பாக கட்டி போட்டிருக்கும் இந்த குட்டி வைரஸின் நதிமூலம், ரிஷிமூலம் சிறிது ஆராய்வோம் …

நவம்பர் 2019 உலகின் வல்லரசுகளில் ஒன்றான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரம். இங்குதான் அந்த நாட்டின் மிகப்பெரிய இறைச்சி சந்தைகளில் ஒன்றான ஹுனான் மொத்த விற்பனைச்சந்தை செயல்படுகிறது. இங்கு இறைச்சி, உயிருள்ள மீன்கள் மற்றும் உயிருள்ள வனவிலங்குகளும் விற்பனைக்கு உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 April 2020

அகிம்சையின் வெற்றி


 siragu agimsai1
அண்ணல் காந்தியடிகளின் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு அகிம்சையாகும். இதனை உணர்த்த, இதன் வலிமையை உணர்த்த அவர் பல பக்கங்கள் எழுதியுள்ளார், பேசியுள்ளார், அனுபவித்துள்ளார். அகிம்சை  வெற்றிக்கான வழி என்கிறார் காந்தியடிகள். அந்த வெற்றிக்கான வழியைப் பெற பெற சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். அகிம்சையே மானிட வர்க்கத்தின் நியதி. அகிம்சையே மிருக பலத்தைக் காட்டிலும் கணக்கிலடங்காச் சிறப்பும் உன்னதமும் வாய்ந்தது.
அகிம்சை ஒருவரின் தன்மான உணர்விற்கும், சுயமரியாதைக்கும் பாதுகாப்பு தருவது. சொத்துகளை, செல்வங்களை ஆட்கள் வைத்துப் பாதுகாப்பதை விட அகிம்சையைப் பின்பற்றினால் அதுவே மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும். தவறான வழிகளில் சேர்த்த பொருள்களுக்கும், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அகிம்சை துணை நிற்காது. ஒரு நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைக்கு எதிரானது அகிம்சை.
அன்புடைய எவரும் அகிம்சை வழி நிற்கலாம். அதற்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. அன்பிற்கு என்ன வேறுபாடுகள்.

      “ வாழ்க்கைச் செயல்கள் முழுவதும் அகிம்சையில் அமையவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம்


siragu thirukkural1
அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10 குறள்கள் கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர். மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா, அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த 50க்கும் மேற்பட்ட சொற்களை (54 சொற்கள்), 100க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார். இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும் அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.
அறிவுடைமை என்பதன் விளக்கம்:
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது;
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421),
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422),
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425),
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு (426),
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு (427),
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),
எதிர்கொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச் செய்வது அறிவு (429),

இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு அறிவே எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 15 April 2020

கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!


siragu coronavirus2
உலகெங்கிலும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு படு தீவிரமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பேரச்சத்தைத் தருவதாக இருக்கிறது. உலகிலுள்ள மனித குலமே செய்வதறியாது கலங்கி போய் தவிப்பதை பார்க்கும்போதும், வளர்ந்த நாடுகள் அனைத்தும் மிகுந்த உயிரிழப்புகளை சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் என்ன செய்யப் போகிறோம், நம் அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே நம் முன்னே வந்து நிற்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 என அதிகரித்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் செய்தியில், கடந்த 12 மணிநேரத்தில், 30 பேர் உயிரிழந்திருப்பதாக கூறுகிறது. தமிழ்நாட்டின் நிலைமையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்றைய புள்ளிவிவரப்படி, கோவிட் 19 பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை 911 எனவும், இறந்தவர்கள் 9 எனவும் கூறுகிறது. நாடு அளவில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையில், முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தை அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஆனால், இந்நிலையில், கொரோனா நிதி வழங்கும் விசயத்தில் கூட, மத்திய பா.ச.க அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மனித நேயத்துடன், உயிர் காக்கும் இந்த நிதி வழங்கல் நடவடிக்கையில், வடமாநிலங்களுக்கு ஒரு விதமாகவும், தென் மாநிலங்களுக்கு ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகிறது. நம்மை விட குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு, அதாவது, 234 பேர்கள் பாதிப்புள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.996 கோடியும், 179 பேர்கள் கூட இல்லாத மத்தியப்பிரதேசத்திற்கு, ரூ.910 கோடியும், 21 பேர்கள் பாதித்த ஒடிசாவிற்கு, 802 கோடியும், 32 பேர்கள் பாதித்த பீகார் மாநிலத்திற்கு ரூ.708 கோடியும் , 122 பேர் பாதித்திருக்கும் குஜராத் மாநிலத்திற்கு ரூ. 662 கோடியும், 571 பாதித்த தமிழ்நாட்டிற்கு ரூ.510 கோடி என ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஒதுக்கீடு செய்த அன்று வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை தமிழ்நாட்டில் 911 என உயர்ந்திருக்கிறது. அன்றைய நிலவரப்படியே பார்த்தாலும் , நம்மைவிட குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது பா.ச.க அரசு. பா.ச.க ஆளும் மாநிலங்களுக்கும், அது கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களுக்கும் அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாடு என்றாலே எப்போதும் ஒரு வகையான பாகுபாட்டை கடைபிடிக்கிறது பா.ச.க அரசு. அதிலும், உட்சபட்ச பாகுபாடாக, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், தமிழ்நாட்டை அடுத்து மூன்றாவதாக உள்ள கேரளத்திற்கு வெறும் ரூ. 157 கோடி அளிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த விசயத்தில் கூடவா வன்மத்தைக் காட்ட வேண்டும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நாள் கூலித்தொழிலாளி (கவிதை)


siragu ooradangu1


இயற்கை
தன் விதியை
தானே எழுதிக்கொள்கிறது..
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில்..

நாள் கூலித்தொழிலாளி!
வெளியே போனால்
கொரோனா வைரஸ் பிடிக்குமாம்..

வீட்டுள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 10 April 2020

அவளும் அவனும் (சிறுகதை)


siragu coronavirus3
“டாக்டர், கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன்” என்றாள் ரஞ்சித்தா. “இருங்க ஒவ்வொரு நோயாளியா தானே பார்க்க முடியும்”
“இல்ல டாக்டர் என் தோழிக்கு தலைல அடிபட்டிருச்சு ”
“சரி இருங்க வறேன் “
தலையில் பலமாக அடிபட்டிருந்தது பகுத்தறிவிற்கு. இரத்தம் வழிவதை ஒரு கைக்குட்டையால் அழுந்த பிடித்துக் கொண்டிருந்தாள். வலி அவள் கண்களில் தெரிந்தாலும் அதையும் தாண்டிய ஒரு துணிவு அவள் கண்களில் தெரிந்தது. வலியில் முனகவில்லை.
“எப்படி அடிபட்டது?” என்று கேட்டுக்கொண்டே பகுத்தறிவின் தலையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்து, மருந்திட்டான் முரசொலி.
“கூட்டத்துல பேசிட்டு இருந்தோம். நீட் எதிர்ப்பு மாநாடு. தீடிரென்று கலவரம். அப்போ யாரோ தலையில் அடிச்சுட்டாங்க” என்றாள் ரஞ்சித்தா.

“ஓ, போலீசிடம் சொல்லியாச்சா “

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நாளைய உலகம்


siragu agimsai3
காந்தியடிகள் தற்கால உலகின் இன்னல்களுக்குச் சத்தியத்தின் வழியில் தீர்வுகள் சொன்னவர். அவர் எதிர்காலம் பற்றியும் சிந்தித்துள்ளார். நாளைய உலகம் பற்றி அவர் பேசியுள்ளார்.
நாளைய உலகம் பற்றிய அவரின் சிந்தனைகள் கேள்விகள் கொண்டு தொடங்குகின்றன.
      நாளைய உலகம் நன்முறை உடையதாக இருக்குமா?
      அல்லது வன்முறை உடையதாக இருக்குமா?
என்பது அவர் எழுப்பும் முதல் கேள்வி. இக்கேள்வியைத் தொடர்ந்து
எப்போதுமே பசி, பட்டினி, ஆழ்துயர் இவை தீரவே தீராதா. தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமா?
      என்று அடுத்த கேள்வியை முன்வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி தர்மத்தின் மீது எதிர்காலச் சந்ததியினருக்கும் ஆழமான நம்பிக்கை இருக்குமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கொவிட்-19 (கவிதை)


siragu coronavirus6


உள்ள கடவுளை
இல்லை என்கிறதா?
கடவுள் இல்லை
என்பதை மெய்பிக்கின்றதா?
நுண்ணுயிர் கொண்டு
மனிதரை கொன்றிடும்
நவீன விஞ்ஞான



சோதனைகளின் தொடர்ச்சியா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 2 April 2020

சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை (3300–1300 பொது காலத்திற்கு முன்னர் / பொ.கா.மு / BCE) சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்து சமவெளி நாகரிகம். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து ஆற்றங்கரையில் உருவான நகர நாகரிகம். பண்டைய உலகில் புகழ் பெற்று விளங்கியிருந்த சுமேரிய, எகிப்து, சீன நாகரிகங்கள் போன்று, வெண்கலக் கால உலகின் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகர நாகரிகம். சுட்டக் களிமண் செங்கற்களால் சீரிய முறையில் அமைக்கப்பட்ட கட்டடங்களும், நேரான வீதிகளும், பொதுமக்கள் குழுமும் இடங்களும், நீர்த் தேக்கங்களும், குளமும், திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நகரின் கழிவுநீர் வடிகால்களும், நீர்நிலைகளும், வணிக முத்திரைகளும் இன்றைய நாகரிகத்தில் வாழும் பலரையும் கூட வியப்பில் மூழ்கச் செய்யும். சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, நீரற்றுப் போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் புதிய நீர்நிலைகளைத் தேடி இடம் பெயர்ந்து கங்கைச் சமவெளியில் குடியேறினார்கள் என்றும், சிந்து ஆறு தனது தடத்தை மாற்றிக் கொண்டதால் நீரற்று உழவுத்தொழில் நலிவடைந்து மக்கள் நகரைக் கைவிட்டு வெளியேறி இந்தியா முழுவதும் பரவினர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
siragu civilizations

ஆனால், இன்றுவரையிலும் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் மறைந்துபோன சிந்துசமவெளி நாகரீகத்தின் வரலாறு இருக்கிறது. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளின் எழுத்துக்கள் என்னதான் கூறுகின்றன என்பதும் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்து சமவெளிப்பகுதியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல தடயங்களும், ஆயிரத்திற்கும் மேலான நகரக் குடியிருப்புகளும் அவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்ந்து வந்தனர் என்பது மட்டுமே இப்பொழுது நமக்கு உறுதியாகத் தெரியும் தகவல். சிந்துசமவெளி நாகரிகத்தில் திராவிடக் கூறுகள் உள்ளன என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு. சிந்துவெளியின் மறைவுக்குப் பிறகு கைபர், போலன் கணவாய்கள் வழி இந்தியாவிற்குள் ஆரியர் குடியேறினர் என்ற கோட்பாட்டை மறுதலிக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் சிந்துவெளி நாகரிகத்தை வேத கால நாகரீகம் என்றும் அது சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறி வருவதும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்ததே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசும், ஊரடங்கு உத்தரவும்!


siragu coronavirus1
மனிதகுல வரலாற்றில் நாம் பல தொற்று நோய்கள், பல உயிரிழப்புகளைக் கண்டு, அனுபவித்துக் கடந்து தான் வந்திருக்கிறோம். அதன் அனுபவத்திலிருந்து பல பாடங்களும் கற்றிருக்கிறோம். மனித மூளை சிந்தித்து அறிவியலை கண்டடைந்தபோது, இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அந்தந்த காலத்திற்கேற்ப பல புதிய தீர்வுகள் உண்டாகின, அறிவியலார்கள் உருவாகினர், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் கூட, பெரியம்மை, காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்கள் உருவாகி, மக்களை கொன்று குவித்திருக்கிறது.
1918-ல், ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு காய்ச்சலில், இந்தியாவில் மட்டுமே கோடிக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வப்போது இயற்கை இப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் மனிதர்களுடன், தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வது போல், கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் கூட சேர்ந்து தான் வாழ்கின்றன. அவைகளும் நம்மைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொண்டே போவதற்கான வழிமுறைகளை கையாளுகின்றன. தங்களுக்குத் தாங்களே தகவமைத்துக்கொள்கின்றன என்பதுதான் உண்மை. அவற்றிலிருந்து மனிதகுலம் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனாலும், உயிரிழப்புகள் நேர்வதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். அது அதிகளவில் நேராத வண்ணம் தடுப்பதற்கான ஆய்வுகள், அறிவியலின் மருத்துவ உலகம் ஒவ்வொரு முறையும் சாதனை புரிந்துக் கொண்டுதானிக்கிறது. இந்த உலக மக்களும், அவர்களை ஆளும் அரசுகளும் அதற்கான முன்னெடுப்பு முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 March 2020

அறிவியலே துணை (கவிதை)



siragu corona1

புயலுக்குப் பின் அமைதி என்பர்
இங்கோ ஒரு பெரும் புயல்
மௌனமாகச் சுழன்றடிக்கிறது
வலியும் வேதனையும்
நாளை வரலாறு பதியும்
அதைப் படிக்க
நாம் இருப்போமா நாளை  ?

தேவையான பொருட்களனைத்தும்
தேவைக்கு மீறி அள்ளப்படுகின்றன
ஒரு சிறு குடும்பத்திற்கு எட்டு
லிட்டர் எண்ணெய்;இருபது கிலோ அரிசி
நவுட்டப்படுகிறது ;

ஒரு நுண் கிருமி நுரையீரலோடு
சண்டையிட்டு மரணம் தர -இங்கோ
வீதிகளில் மக்கள் துவக்கிகளோடு
மலம் துடைக்கும் காகிதத்திற்குச்

சண்டையிடுகின்றனர் ;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 25 March 2020

அகிம்சை


siragu agimsai3
காந்தியடிகளின் தலையாய கொள்கைகளில் ஒன்று அகிம்சையாகும். அகிம்சை என்பதற்குக் காந்தியடிகள் உலகளாவிய அன்பு என்று பொருள் கொள்ளுகிறார் காந்தியடிகள்.
ஹிம்சை என்பது துன்புறுத்துதல் என்று பொருள்படும். அஹிம்சை என்றால் துன்புறுத்தாது இருத்தல் என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். என்றாலும் அகிம்சை என்பதை எதிர்மறை நிலையில் பொருள் உடையது என்று கொள்ளவேண்டாம் என்பது காந்தியடிகளின் கருத்தாகும். அகிம்சை என்பது தீங்கு செய்வருக்கும் கூட நன்மை செய்வது ஆகும்.
அகிம்சை என்பது தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்வது என்றால் தீங்கு செய்பவன் தீங்கு செய்து கொண்டே இருக்கலாமா என்று ஒரு கேள்வி எழும். அதற்கும் பதில் தருகிறார் காந்தியடிகள்.

தீங்கு செய்பவனைத் தொடர்ந்து அந்தத் தீங்கினைச் செய்து செய்யச் சொல்வதோ, அல்லது அதைப் பொறுத்துக் கொள்வதோ மட்டும் அகிம்சை அல்ல. அதற்கு மாறாக அன்பு என்கிற அகிம்சையின் செய்வினை வடிவம் உன்னைத் தவறு செய்கிறவர்களிடம் இருந்து விலகச் செய்யும். அதனால் அவனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்போ காயமோ ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதுவே அகிம்சை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 March 2020

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2


siragu anbalagan1
தகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான விளைநிலத்தில் அனைவரிடம் இருந்தும் விதைநெல் பெற்று, விதைத்து, பயிர் விளைவித்த பின்னர், விளைச்சலைத் தக்க முறையில் பங்கிடாது, அவரவர் திறமைக்கும் வலுவுக்கும் ஏற்ப அறுவடை செய்து கட்டிக் கொண்டு போங்கள் என்று கூறுவோமானால், அறம் எதுவெனத் தெரிந்தவர் அதை ஏற்றுக்கொள்ள வழியில்லை என்கிறார் (பக்கம் – 64). ஆனால் கல்வித்துறைக்காகச் செலவிடும்வரிப் பணத்திற்கு அதுதான் அப்பொழுது விளைவாக இருந்திருக்கிறது. இந்த சுரண்டல் முறையை அநீதி என்று உணர்ந்தவர் வெகு சிலரே. அரசு குடியானவனின் தெரு கடைத்தேங்காயை எடுத்துச் சென்று அக்கிரகார தெரு பிள்ளையார் கோவிலில் உடைத்துக் கொண்டிருப்பது போல நிர்வாகம் செய்துள்ளனர் என்கிறார் அன்பழகன்.

உண்மையில் பார்ப்பன வகுப்புரிமைக்கான வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகிறது. இத்தரவுகளைக் கொடுத்த அன்பழகன் சதவிகித எண்களையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூலைப் படிப்பவர் கணக்குப் போட வேண்டிய தேவையின்றி ஒரு பார்வையிலேயே வகுப்புரிமை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். தரவுகள் குறித்து அன்பழகன் தனது நூலில் ஒரு கேள்வியை எழுப்பாமல் விட்டாலும்.. தரவுகளைப் பார்வையிட்ட பிறகு நமக்கு எழவேண்டிய கேள்வி… தகுதியும் திறமையும் உள்ளவர் என்று தொழிற்கல்வியை 1940களில் ஆக்கிரமித்த இந்தப் பிரிவினரிலிருந்து அப்துல்கலாம் போல எத்தனை விஞ்ஞானிகளை நாம் இவர்களிலிருந்து அடையாளம் காட்ட முடியும்? தரவுகள் காட்டும் காலகட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவராகவே கலாம் இருந்திருப்பார். இவர்கள் அவருக்கும் மூத்த தலைமுறையினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 23 March 2020

கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள்


siragu kannadasan1
திரையிசைப் பாடல்கள் மக்கள் இலக்கியங்களாகும். எளிய மக்களின் அயர்வைப் போக்கி ஆனந்தம் தரும் இன்பப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் ஆகும். தற்காலத்தில், திரையிசைப் பாடல்கள் இல்லாத பொழுதுகள் இல்லை என்ற அளவிற்கு மக்கள் வாழ்வில் தகவல் தொடர்பு சாதனங்களுடன் திரையிசைப் பாடல்கள் கலந்து நிறைந்து நிற்கின்றன. இத்திரையிசைப் பாடல்களில் தனக்கெனத் தனித்த இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல் திறத்தை “காமம் ஞானம் என்பன அவர் கவிதை நாணயத்தின் இருபக்கங்களாக ஒளிர்ந்தன. அரசயில் அலைகளில் இருந்து மீண்டு அருளியலை நோக்கி நடந்த அவரின் பாடல்களில் ஆன்மிக உணர்வு மிளிர்ந்தது” (சிற்பி, சேதுபதி, தமிழ் இலக்கியவரலாறு, ப.395) என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் ஆன்மிகம், தத்துவம், ஞானம் கலக்காத பகுதிகளே இல்லை என்னும் அளவிற்கு இறைதேடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள் இடம் பெறும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.
இறைவனின் இருப்பிடம்

உழைப்பு இருக்கும் இடம்,  இறைவன் இருக்கும் இடம் என்கிறார் கண்ணதாசன். உழைப்பாளிகளின் உள்ளத்தில் வியர்வையில் இறைவன் நிற்பதாக அவர் உரைக்கிறார். அவ்வாறு உழைப்பவரை அணைப்பவரிடத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பது அவரின் தத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு


siragu pakthi ilakkiyam1
பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக  உயிர்க்கான நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக் கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச் சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.

கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர் பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன் மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல் ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப் பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும். எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 20 March 2020

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு


siragu anbalagan1
“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, மக்கள் மன்றம் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல். அண்மையில் காலமான, இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக தி.மு.க. உருவான நாள் முதல் அதன் உறுப்பினராகவும், 1977 முதல் 2020இல் இறக்கும் வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொது செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் நிதி, கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும், சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அரசியல் பங்களிப்பைச் செய்தவர்.
siragu anbalagan2
siragu anbalagan3

இந்த நூலை எழுதிய காலத்தில் க.அன்பழகன் ஒரு ஆறேழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவராகவும், திராவிட கொள்கைகளில் ஊறிப்போன 30 வயதுக்கும் குறைவான இளைஞராகவும் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. புள்ளிவிவரங்கள், தரவுகள் நிரம்பப் பெற்ற நூலாக இருப்பினும் நூலின் நடை எளிமையாகவும் உள்ளது. வகுப்புரிமை கொள்கைக்காகப் போராடிய தமிழகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே இந்நூலை வகைப்படுத்த முடியும். தமிழக ஆசிரியப்பணியில் இருப்போர் வரலாற்று அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய நூல் இது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்


siragu pakthi ilakkiyam1
பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் இருக்கிறதா என்பதைத் தேடினால் கண்டறிந்து பெறமுடிகின்றது. தென்னகக் கோயில்கள் போலவே வடநாட்டுக் கோயில்களையும் பக்தி இலக்கிய பெருமக்கள் பாடியுள்ளனர். சைவப் பெருமக்கள் வடநாட்டின் தலைப்பகுதியான கைலாயம் என்பதை எட்டவும் தொழவும் முயற்சி செய்ததை திருநாவுக்கரசர், காரைக்காலம்மையார் வழி பெறமுடிகிறது. வைணவ சமய வளர்ச்சி வடநாட்டில் இருந்த தன்மையை ஆண்டாளின் பனுவல்கள் வழி பெறமுடிகின்றது. ஆண்டாள் தன் பாடல்களில் வடநாட்டு வைணவத் திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். அவர் பெண் என்பதால் தானிருந்த திருவில்லிப்புத்தூர், மற்றும் திருவரங்கம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது. ஆனால் வட நாட்டு வைணவத் தலங்களைப் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆண்டாளிடம் இருந்துள்ளது. மேலும் வடநாட்டில் வைணவத் தலங்கள் சிறப்புற்று விளங்கியதால் அவை பற்றிய குறிப்புகளைச் செவிவழிச்செய்திகளாகக் கேட்டு ஆண்டாள் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டாம் திருமொழி கண்ணன் இருக்குமிடம் கொண்டு செல்வீர் என்ற தலைப்பில் அமைகின்றது. இத்திருமொழியில் ஆண்டாள் வட நாட்டு வைணவத் தலங்களைக் குறிப்பாக கண்ணன் சார்புடைய தலங்களைக் குறித்துப் பாடியுள்ளார். கண்ணன் வாழ்ந்த வடநாட்டு ஊர்களுக்கு என்னைக் கொண்டு சேருங்கள் என்பது அப்பாடலின் பொதுப்பொருள். ஆண்டாள் தானாகப்போக இயலாத நிலையில் கண்ணன் மீதான காதல் அதிகரிக்கும் சூழலில் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்ணன் இருப்பிடங்களுக்கு அழைத்துச்செல்லக் கோருவதுபோல இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 12 March 2020

குமரகுருபரரின் தன் வயப்படும் நிலை


siragu kumarakrubarar2
சைவ இலக்கிய படைப்பாளர்களின் வரிசையில் தனித்த இடம் பெறுபவர் குமரகுருபரர். அவர் தமிழையும் சைவத்தையும் இருகண்களெனக் கொண்டு காசியில் மடம் நிறுவிய பெருமையர். அவரின் படைப்புகள் அனைத்தும் சைவத்தின், சிவத்தின் பெருமையைக் காட்டுவன. குமரகுருபரர் எத்தலத்திற்குச் செல்கிறாரோ அத்தலத்தைப் பற்றிய படைப்பினை அத்தலச் செய்திகளுடன் நேரில் காணும் வண்ணம் படைத்துத் தரும் பாங்கினை உடையவர். இவரின் படைப்புகளில் தன்வயமாகும் பண்பு பெரிதும் காணப்படுகிறது.

திருவாரூர் தலத்திற்குச் செல்லும் குமரகுருபரர் அத்தலத்து இறைவனைப் பற்றி திருவாரூர் நான்மணிமாலை என்ற சிற்றிலக்கியத்தைப் பாடுகிறார். இச்சிற்றிலக்கியத்தில் திருவாரூரின் அனைத்து பெருமைகளையும், அத்தலத்து இறைவனின் சிறப்புகளையும், அத்தல அமைப்பு பற்றிய செய்திகளையும், இவற்றைத் தாண்டி தான் அனுபவித்த இறைஅனுபவங்களையும் அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் பாடல்களில் காணப்படும் சிறப்புக் கூறு தன் வயமாதல் ஆகும். எங்கு சென்றாலும் அங்குள்ள இறைவனுடன், ஊருடன் தன்வயமாகி இவர் நின்று கலந்து நிற்பார். இத்தன்வயமாகும் பண்பு இறைவனுக்கு உரியது. இந்தத் தன்வயப்பண்பே இறையடியாரான குமரகுருபரருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்டவனின் அடியார் அவனைப் போலவே தன்வயத்தனாகும் பண்பினையும் பெறுவர் என்பதற்குக் குமரகுருபர சுவாமிகள் ஓர் எடுத்துக்காட்டு.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 10 March 2020

ஒரு கோப்பை நஞ்சு !!


siragu oru koppai nanju1
சாக்ரடீஸ் உலக தத்துவ ஞானிகளின் தந்தை. ஏதென்ஸ் நகரின் ஏற்றமிகு தலைவர். வாலிபர்களை, இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டினார் என்ற குற்றத்திற்காக ஒரு கோப்பை நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டவர். அந்தத் தந்தை, தன்னை தப்பித்துப் போகும்படி தன் தோழர்கள் கட்டாயப்படுத்தியபோதும், அதற்கான வழிகள் இருந்த போதும் அதை விரும்பாது, அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு தன் மரணத்தின் வாயிலாக இந்த மக்கள் உணர்வு பெற்று சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று எண்ணி அந்த நஞ்சு கோப்பையை விரும்பி குடித்து தன் உயிரை மக்களின் அறிவுத் தூண்டலுக்காக மகிழ்ச்சியாக உரமாக்கியவர்.
வரலாறு ஏதென்ஸ் நகரத்திற்கு ஒரு அறிவுத்தந்தையை ஈன்றது போல தமிழ்நாட்டிற்கும் காலம் ஈன்ற அறிவுத் தந்தை தான் பெரியார். ஏதென்ஸ் நகர நீதிமன்றம் சாக்ரடீஸ்க்கு நஞ்சு குடிக்க வேண்டும் என்று தண்டனை வழங்காமலிருந்திருந்தால் கிரேக்கம் பழம் பெருமைகளில் இன்புற்று அழிந்து போயிருக்காது. ஒரு அறிவியக்கம் கண்டிருக்கலாம். அந்தக் குறையை வரலாறு தமிழ் நாட்டின் மண்ணில் தீர்த்துக் கொண்டது தான் காலத்தின் திருப்புமுனை. பெரியார் தோன்றினார். பழம் பெருமைகளைப் பேசவில்லை, புராண – இதிகாசங்களின் பெருமை பேசவில்லை – கடவுள் பெருமை பேசவில்லை – அவர் சமத்துவம் பேசினார். சக மனிதனை மதிக்கத் தடையாக இருக்கும் சாதி – மதம் – கடவுள் ஒழிந்து போக வேண்டும் என்று பேசினார். அந்த பேச்சைப் போகிற போக்கில் பேசிவிட்டுப் போகாமல் இயக்கமாகக் கட்டமைத்துப் பேசினார். இந்த தந்தை தனக்கு வளமான வாழ்வு இருந்தபோதும் தன் மண்ணின் மக்கள் அடிமையாக இருக்கக் கூடாது என்பதற்காக இறக்கும் வரை ஊர் ஊரக சுற்றி பரப்புரைச் செய்தார். உலக அறிஞர்களின் சிந்தனைகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சாக்ரடீசை அறிந்ததும் தமிழ்நாட்டின் அறிவியக்க தந்தையின் வாயிலாகத் தானே!!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/

Thursday 5 March 2020

தொடரடைவு


Siragu tamil in computer2
ஒரு மொழி வளரக் கணினியின் துணை என்பது இப்போது அத்தியாவசியமாகி விட்டது. குறிப்பாக இணையப் பரவல் என்பதும் மொழியின் வளர்ச்சிக்குத் துணை புரிவதாக உள்ளது. அகராதிகள் பல வகைகளில் தற்போது இணைய வழி கிடைக்கின்றன. தமிழ்மொழிக்கான அகராதிகளும் பல நிலைகளில் இணையவழி கிடைக்கின்றன. தமிழ்த் தொடரடைவுகள் மதுரையைச் சார்ந்த கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா என்பவர் உருவாக்கிய தமிழ் கன்கார்டன்ஸ் (http://tamilconcordance.in/) ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது. இதனுள் பல இலக்கியங்கள் தொகுக்கப்பெற்று அவற்றில் இருந்து சொல்சொல்லாக தொடர் தொடராகத் தேடி அந்த சொல், அந்தத் தொடர் எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் வருகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது. இது ஆய்வாளர்களுக்கு மிகத் தேவையான நல்ல இணைய தளம். இதன்வழி ஆய்வாளர் வெகு சீக்கிரமாக தான் தேட வேண்டிய வார்த்தை, அல்லது தொடர்களை உடன் பெற இயலும். ஒரு பொருள் குறித்துக் கட்டுரை வரைவோர் அச்சொல் இத்தளத்தில் இட்டு அது எந்நத எந்த இலக்கியத்தில் உள்ளது என்றை அறிந்து கொள்ள இயலும்.
தொடர் அடைவு (concordance)

ஒரு இலக்கியத்தில் அல்லது ஒரு படைப்பாளர் எழுதிய படைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சொல் எவ்வகையில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை அகரவரிசைப்படி இடம் பெற்றுள்ளத் தொடராகக் காட்டுவது தொடர் அடைவு (a book or document that is an alphabetical list of the words used in a book or a writer’s work, with information about where the words can be found and in which sentences) எனப்படுகிறது. ஆங்கில இலக்கியத்திற்குப் பல்வேறு தொடரடைவுகள் இணைய அளவில் உள்ளன. தமிழில் முனைவர் பா. பாண்டியராஜா உருவாக்கிய தொடரடைவு தமிழ் ஆய்வு உலகிற்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 March 2020

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது?


siragu kumarikandam11
தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் காலத்தில் தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன எனத் தெரிகிறது. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் குறிப்பிட்டு தமிழ்கூறும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடந்ததை (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) விளக்குவார்.
   “தென்குமரி வடபெருங்கல்
   குணகுட கடலா எல்லை”
என்ற குறுங்கோழியூர் கிழார் (புறநானூறு:17:1-2); மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி:70-71) சங்கப்பாடல்களிலும்,
  “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
   தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”
என இவ்வாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வேனிற் காதையிலும் (வேனிற்காதை:1-2) குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகத்தின் எல்லையை நாம் அறிகிறோம்.
தென்குமரி:
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் தென் எல்லையான குமரிமுனையைக் கடல் கொண்டது என்பதை,
  “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
   பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
   குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 March 2020

தூண்டிவிடப்படும் மதவெறியும், துண்டாடப்படும் மக்களும்!


siragu caa1
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக அறவழியில் அமைதியாகப் போராடிவந்த தலைநகர் தில்லி மக்கள், இன்று திடீரென்று தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதில்,  உலக அரங்கில் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற வகையில் மிகவும் வெட்கப்படவேண்டியவர்களாக, தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நடந்திருக்கிறது. வடகிழக்கு தில்லியில், கடந்த மூன்று தினங்களாக நடந்த வெறித்தனமான வன்முறையில் இதுவரை ஒரு தலைமை காவலர் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 300 பேர்களுக்கும் மேலாக காயமடைந்துள்ளனர் என்ற செய்தி நம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்க வைக்கிறது.
siragu caa2

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் சில இந்துத்துவ அமைப்புகள், வடகிழக்கு தில்லியிலுள்ள மாஜ்பூர், ஜபராபாத், சீலம்பூர், சந்த்பாக் ஆகிய இடங்களில் தங்களின் போராட்டத்தை நடத்தின. அதில், இச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடிய இரு தரப்பினர்கிடையே வன்முறை வெடித்தது. அதில், ஆதரவாக போராடியதாக கூறப்படுவோர், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். தீ வைத்து கொளுத்தினர். கடைகள், வீடுகள், கார்கள் என அனைத்தும் நாசமாக்கப்பட்டன. இவையனைத்தும் மத சிறுபான்மையினரான இசுலாம் மக்களை குறிவைத்தே தாக்கப்பட்டன. அதிகப்படியான அராஜகங்கள் நடந்தேறியது. தாக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாதபடி அடித்து வழிமறிக்கபட்டன. வீடு புகுந்து உள்ளே இருக்கும் இசுலாமிய மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இது எல்லாம் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே இசுலாம் வீடுகள் அடையாளம் கண்டு வைத்துக் கொண்டு, கலவரம் போது, மிகச்சரியாக அவர்களின் இல்லங்கள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. மசூதிகளும் இதற்குத் தப்பவில்லை. தீவைக்கப்பட்டு, உள்ளே புனித நூல்கள் உட்பட அனைத்தும் எரிக்கப் பட்டிருக்கின்றன. சிசிடிவி கேமராக்கள் உட்பட உடைத்து ஒரு கொடூர வன்முறையை இசுலாம் மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 27 February 2020

அன்னி மிஞிலி


siragu ilakkiyam1
அன்னி மிஞிலி சங்கக் காலப் பாடல்களில் நாம் காணும் பெயர். யார் இவர்? இவர் பெண்!! அதுவும் வஞ்சினம் கொண்டு சூளுரைத்த பெண், அகநானூறு 196 மற்றும் 262 இவர் பெயரைப் பதிவு செய்திருக்கின்றது. இரு பாடல்களையும் எழுதியவர் பரணர். பரணர் சங்க இலக்கியப் புலவர்களுள் முக்கியமானவர். சங்க இலக்கியப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வது இவர் பாடல்களின் தனிச் சிறப்பு.

சரி அன்னி மிஞிலி யாரை எதிர்த்துச் சூளுரைத்தாள்? கோசர்களை எதிர்த்து? யார் இந்த கோசர்கள் என்று பல வரலாற்றுத் தரவுகளும், குழப்பங்களும் உண்டு. சுருக்கமாகக் கோசர்கள் என்றால் யார் எனப் பார்க்கும் போது, கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் யார் என்பது ஆய்விற்கு உரியது. ஆனால் அவர்களைப் பற்றிய செய்திகள் நிறையச் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 26 February 2020

திறன்மிகு தியாகராயர் சாலை இராமியா


siragu t nagar2
அண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சாலைகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தத் திறன்மிகு சாலைகளை  (Smart Roads) அரசு அமைத்துக்கொண்டு இருக்கிறது. அவற்றுள் சென்னை, தியாகராய நகரில் உள்ள தியாகராயர் சாலையும் ஒன்று.
முன்பு தியாகராயர் சாலையின் இரு மருங்கிலும் நடைபாதைக் கடைகள் நிரம்பி இருந்தன. அக்கடைகள் இருப்பது நடைபாதையில் நடப்பவர்களுக்கு இடையூறாக இருப்பாகக்கூறி அவற்றை அகற்ற முயன்றார்கள். ஆனால் தங்கள் வாழ்வுரிமை பாதிப்பதாகக்கூறி நடைபாதை வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி தங்கள் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டனர். வழக்கமான முறையில் நடைபாதைக் கடைகளை அகற்ற முடியாததைக் கண்ட “மிகத்திறமையான” அரசு அதிகாரிகள் திறன்மிகு சாலைத் திட்டத்தின் மூலம் அதை செய்துவிடலாம் என்று ஒருவழியைக் கண்டனர். “புலிக்குப் புல் வாங்கிப் போட்ட செலவுரூ.500″ என்பதுபோல் நடைபாதை வணிகர்களின் வாழ்வுரிமைக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கடைகள் கட்டுவதாக அத்திட்டத்தை வடிவமைத்தனர்.
திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அது தங்களைப் பாதிக்கும் என்று நிறுவமுடியாத நிலையில் நடைபாதை வணிகர்கள் அதை எதிர்க்க முடியவில்லை.

பணமதிப்பு இழப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டாலும் நடைமுறையில் அப்படி எதுவும் நடக்காததுபோல் நடைபாதை வணிகர்களுக்கு அளித்த உறுதிமொழியும் பொய்யாகிப்போனது. அதுஒருபக்கம் இருக்கட்டும். யார் யார் பயன் அடைந்தார்கள்? என்ன என்ன விளைவுகள் ஏற்பட்டன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.